நீயும் மாறிவிடு

......... *நீயும் மாறிவிடு*
☑☑☑☑☑☑☑☑

ஆலையில் பிழிந்தாலும்
கரும்பது இனித்திடும்

சாலையில் புதைத்தாலும்
கற்கள் வலிமை தரும்

நீரினில் கரைத்தாலும்
சர்க்கரை சுவைத்திடும்

நெருப்பிட்டு எரித்தாலும்
விளக்கது ஒளிதரும்

விதையினை புதைத்தாலும்
செடியது முளைத்திடும்

வெட்டியே எடுத்தாலும்
வைரங்கள் ஜொலித்திடும்

தடியினில் அடித்தாலும்
மணியது ஒலி தரும்

வெய்யில் தன்னை சுட்டாலும்
மரமது நிழல் தரும்

கரியினை புகைத்தாலும்
வெப்பத்தையே கொடுத்திடும்

காந்தத்தை இழுத்தாலும்
எதிர்முனையை கவர்ந்திடும்..

உழைப்பை திருடினாலும்
தேனது மருந்தாகும்..

சிந்திய பொருள் கூட
எறும்புக்கு இரை தரும்..

கொள்ளையே அடித்தாலும்
பணமது பயன்படும்..

நெல்லையே உரித்தாலும்
உணவைத்தான் கொடுத்திடும்..

என்ன சொல்லி திட்டினாலும்
குழந்தையது சிரித்திடும்..

ஏமாற்றி பெற்றாலும்
வெற்றி கூட பரிசு தரும்..

மத்திட்டு கடைந்தாலும்
தயிரது வெண்ணெய் தரும்..

முறுக்கியே இணைத்தாலும்
நார் கூட கயிறு தரும்..

புவியையே துளைத்தாலும்
கிணறது நீர் தரும்..

எல்லாமே எதிர்மறையாய்
நன்மை மட்டும் செய்திடவே...

நீ மட்டும் அடிபட்டால்
நிற்கின்றாய் பழியுணர்வாய்..

***நீயும் கூட மாறிவிடு !

மறக்க மன்னிக்க பழகிவிடு...!***

க.செல்வராசு..

எழுதியவர் : க.செல்வராசு (16-Sep-18, 10:53 am)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 118

மேலே