நடக்கும்போது எழுதியது

நீயும் நானும்
பேசிக்கொண்டிருந்தோம்.
அவர்கள் நம்மை சுட்டி
அவனும் அவளும்.... என்றதும்
நீ
அவர்களை காட்டி
நம்மைப்பற்றியோ என்றாய்.
அவர்கள் போனதும்
நாமும் போய் விட்டோம்.
குருவிகள் வந்தமர்ந்தன.

*****
ஒருவேளை அப்படியானால்
ஒருவேளை இப்படியானால்
இப்படியாகும்போது
அப்படிச்செய்தால்
அப்படியாகும்போது
இப்படிச்செய்தால்...
நன்கு யோசித்தபின்னரே
நன்கு தூக்கம் வந்தது
ஒரு முடிவும் தெரியாமல்.

*****

லல்லிக்குட்டி
ஒவ்வொரு மழையின்போதும்
வானம் ஏமாறட்டுமென்று
ஒளித்துவைப்பாள் வாளிகளை.

*****
நீங்கள் மகிழ்ச்சியாக
திரைப்படம் பார்க்கின்றீர்.
உன்னதமாக அரட்டையும்
வம்பும் பேசுகின்றீர்.
விழித்ததும் இன்னும்
சோம்பலாக உணர்கின்றீர்.
உங்கள் பொழுதுகள்
அனாதையாய் சாவதை
களங்கமின்றி ரசிக்கின்றீர்.
நீங்கள் திருப்தியாக இருக்கின்றீர்.
உங்களை கவனிக்கும்
நானும் திருப்தியாக உள்ளேன்.
*****

எழுதியவர் : ஸ்பரிசன் (8-Dec-18, 6:33 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 85

மேலே