தமிழ் வாழ்த்து

ஓடுகின்ற உதிரத்தில்
கலந்தாய் - என்றன்
உணர்வுகளில் உயிர்த்தெழுந்து
நிறைந்தாய் - உன்னைப்
பாடுகின்ற போதுவிழி
பரவசத்தில் நீர்ச்சொரியப்
பார்த்துநீயும் பூரித்து
மகிழ்ந்தாய் - என்னைப்
பைந்தமிழே பரிவுடனே
அணைத்தாய் !!

கன்னலெனச் சுவையினிலுன்
இனிமை ! - உண்டு
கண்டவர்க்கோ என்றுமில்லை
தனிமை - உன்னை
அன்புடனே அண்டியவர்
அகங்குளிரச் செய்திடுவாய்
அழகேவுன் வடிவமென்றும்
இளமை - இந்த
அவனியிலே உனக்குமுண்டோ
முதுமை !!

வாயார வாழ்த்திடுவேன்
நித்தம் - உன்னை
வணங்குகையில் குளிர்ந்திடுமென்
சித்தம் - என்னைத்
தாயாகத் தாங்கிடும்நீ
தயவுடனே இவ்வரங்கில்
சந்தத்துடன் துள்ளிவரும்
சத்தம் - கேட்டுத்
தமிழன்னாய் ! தணிந்திடுமென்
பித்தம் !!

எளியவளால் சீர்பெறுமா
பாட்டு - என்
இனியவளே வந்துசுவை
கூட்டு - இன்று
களிப்புடனே கற்கண்டாய்க்
கவிபாடச் செய்திடுவாய்
கைகுவித்து வணங்கிடுவேன்
ஏற்று - உன்
கருணைவிழி மலர்ந்தென்னை
மீட்டு !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (9-Dec-18, 3:45 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 61

மேலே