அவன் ஒரு மகளின் தந்தை

அவள் அங்கம் தவிர்த்து
அனைத்தும் அழகாய்
தெரிவது அப்பனுக்கு மட்டும்தான் ,

தாயிடமும் தாரத்திடமும்
முழுமையாய் உணராத
பெண்மையின் தன்மையை ,
மகளிடம் மட்டுமே
மண்டியிட்டு கற்கிறான் .

பிஞ்சு மகள் பாதங்களை
பின்தொடர செய்கிறது ,
அம்மாவின் மனைவியின்
அன்பினை அலட்சியம் செய்தது.

வக்கிர பார்வைகள் குருடாகிப்போனதும்
வாலிப வசைகள் ஊமைகளானதும்
கேலியும் கிண்டலும் கிருக்கெனப்பட்டு
சுருக்கென உரைத்ததும் ....
பிறந்தவள் பெண்ணென்பதாலே .

பெண்மையின் தன்மையை உணர
சில தலைமுறை தேவையாய் இருந்தது ,
அம்மா அக்கா தங்கை தாரம் ...
முடிவில் மகளாய் .

தாயொரு தெய்வம்
தாரமோ தேவதை
என்றவன் கண்டான்
இரண்டையும் இவளிடத்தில் .

எழுதியவர் : (25-Dec-18, 5:33 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 51

மேலே