பொங்கலோ பொங்கல்

போற்றிக் கொண்டாடிடுவோம்
பொங்கல் திருநாளை!
பொலிவுடன் வரவேற்றிடுவோம்
போகியின் மறுநாளை!

புலரட்டும் பூமிதனில்
புதியதொரு காலை!
புதுப்பானை பொங்கலிட்டு
துவங்குவோம் இந்நாளை!

வேற்றுமைகள் களைந்தெரிய
இது நல்ல வேளை!
இன்னல் துன்பம் அனைத்திற்கும்
இனியில்லை வேலை!

அனைவரையும் இனைத்திடுமினி
அன்பு எனும் சாலை!
ஏற்றமிகு வாழ்வமைந்தால்
எவருமில்லை ஏழை!

தை பிறந்தால் பிறப்பதிங்கே
வழி மட்டுமில்லை!
நம் தோள் வந்து சேருமினி
மகிழ்ச்சியெனும் மாலை!

வறண்ட நிலம் இனியாகும்
வளமான சோலை!
பாலை நிலம் உடுத்தட்டும்
பச்சை வண்ணச் சேலை!

புத்தாண்டென புரிந்துகொள்வோம்
தையின் முதல் நாளை!
புரியாதவர் படித்திடட்டும்
புரட்சிக் கவிஞர் நூலை!

- நிலவை பார்த்திபன்

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (13-Jan-19, 7:14 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 81

மேலே