ஈகைத் திருநாள்

துவங்கியது ரமலான் எனும்
புனிதமிகு மாதம்! - இதில்
துளிர்க்கட்டும் ஈகை குணம்
இதயங்கள் தோறும்!

பள்ளிவாசல் எங்கும்
பக்திமணம் கமழும்! - இது
பட்டினியாய் இருந்து நமது
பாவம் தீர்க்கும் தருணம்!

ஐம்பெரும் கடமைகளில்
மூன்றாவது இந்நோன்பு! - அதில்
ஐம்புலனும் அடக்குதல்
மனிதர்க்கு மான்பு!

சஹர், இப்தார் இரண்டிற்கும்
இடைப்பட்ட நேரம் - இதில்
பசி, தாகம் நம்மோடு
போரிட்டுத் தோற்க்கும்!

திருமறை ஓதல்கள்
தினந்தோறும் தொடரும்!
ஐம்முறைத் தொழுகையால்
ஆனந்தம் படரும்!

உண்ணாமை, பருகாமை,
புணராமை தவிர
பகைமையை மறப்பதும்
நோன்பென்று அறிக!

மறை போற்றும் மாதமிதில்
இறையோனைத் தொழுவோம்!
பிறை காணும் நாள்வரையில்
நோன்பதனைத் தொடர்வோம்!

நபிமார்கள் நல்வாக்கை
நம் நெஞ்சில் ஏற்போம்!
நல்லிணக்கம் தழைத்தோங்க
நம் கரங்கள் கோர்ப்போம்!

ஈகைத் திருநாளதனை
வரவேற்று மகிழ்வோம்!
இதமான வாழ்த்துகளை
எல்லோர்க்கும் பகிர்வோம்!

- நிலவை பார்த்திபன்

எழுதியவர் : நிலவை பார்த்திபன் (21-May-19, 1:14 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 235

மேலே