நறுந்தொகை 17
நிலைமண்டில ஆசிரியப்பா
தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி யாட்பெரும் படையொடு
மன்னர்க் கிருக்க நிழலா கும்மே. 17
- அதிவீரராம பாண்டியர்
பொழிப்புரை:
ஆலமரத்தின் தெளிந்த சிறிய கனியிலுள்ள ஒரு வித்தானது தெளிந்த நீரையுடைய குளத்திலுள்ள சிறிய மீனின் முட்டையைக் காட்டிலும், நுண்ணிதே யானாலும், அது பெருமை பொருந்திய யானையும், அலங்கரிக்கப் பட்ட தேரும், குதிரையும், காலாளும் ஆகிய பெரிய சேனையோடு அரசருக்கும் தங்கியிருப்பதற்கு நிழலைத் தரும்.
சிறிய ஆலம்பழத்திலுள்ள விதையானது சிறிய மீனின் முட்டையைப் பார்க்கிலும் சிறியதாயிருப்பினும் அது முளைத்து வளர்ந்து நால்வகைச் சேனையுடன் கூடிய அரசரும் தங்கியிருக்க நிழலைத் தரும். உருவத்தாற் சிறியவரெல்லாம் சிறுமையுடையவராகாது; பெருமையுடையவருமாவர் என்னும் கருத்தை அடக்கிக் கொண்டிருப்பது இப்பாடல்.
தெள்ளிய பழத்து என்றும், விதை நுண்ணிதேயாயினும் என்றும் கூட்டி, அது முளைத்து வளர்ந்து நிழலாகும் என்றும் பொருள் கொள்ள வேண்டும்.