குளித்து மூழ்கி குறியிட்டால் காணலாமோ இறைவனை
உலகில் நீ உண்டோ இல்லையோ
ஒளியாக வலியாக வருவாயோ
மதம் என்ற மயக்கும் சொல்லால்
மதி மயங்கி கிடக்கும் மாந்தர்
மதி தெளிய வழி செய்வாயோ
அதி அற்புத நிலையைப் பெறவே
விதியை மாற்றும் வித்தை உள்ளதாய்
விடிய விடிய கண் விழித்தல் சரியோ
ஐந்துவேலை தொழுதலால் நீ மகிழ்வயோ
அப்பத்துடன் மது அருந்தினால் வருவாயோ
குளித்து மூழ்கி குறியிட்டால் குதுகலிப்பாயோ
கோடி முறைக் கூவி அழைத்தால் தெரிவாயோ
முடி மழித்தோ நீண்டு வளர்த்தோ இருப்பது சரியோ
முழு ஆயூளும் மெளனித்து பிறந்த மேனி நிலை புனிதமோ
எங்கும் நீ இல்லை என எளனிப்பவர் சொல் உண்மையோ
பொன் பொருள் இன்பம் களைந்தால் நீ கிடைப்பாயோ
பொது நலனுக்கு சேவை செய்தலில் உணரலாமோ
போர் செய்து புகழ் ஈட்டினால் காணக் கிடைப்பாயோ
நூறு மரம் நட்டு நீர் நிலை வெட்டினால் வருவாயோ
திரவங்களைத் தெளித்து வைத்து தேடலாமோ
திக்கு தோறும் விகாரம் அமைப்பின் விரும்புவாயோ
காணும் உயிரினங்களை பலியிட்டால் காணலாமோ
எந்நிலையில் உன் இருப்பை உணர வேண்டும்
எப்பொழுது இவ்வினாக்களுக்கு விடை கொடுப்பாய்
வினவியது நானோ விடை கொடுக்க வேண்டிய நீயோ
--- நன்னாடன்.