பொய்யாமை 2 – கலி விருத்தம் - வளையாபதி 33

கலி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!

2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

கல்வி இன்மையும் கைப்பொருள் போகலும்
நல்லில் செல்லல்க ளால்நலி(வு) உண்மையும்
பொய்யில் பொய்யோடு கூடுதற்(கு) ஆகுதல்
ஐயம் இல்லை அதுகடிந்(து) ஓம்புமின். 33 வளையாபதி

பொருளுரை:

பொய்கூறி உயிர்வாழும் வாழ்க்கையில் கல்வியாலுண்டாகும் அறிவுப் பொருளில்லாமலும், கையிலுள்ள செல்வப் பொருள் அழிவும், நன்மையில்லாத செயல்களைச் செய்வதால் துன்பங்களாலே வருந்த வேண்டியிருப்பதும் ஏற்படும் என்பது பொய்யில்லை;

முக்காலும் வாய்மையேயாகும். இதில் ஐயம் சிறிதும் இல்லை.

ஆதலால், அப்பொய் கூறுதலை ஒழித்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வீர்கள் என எச்சரிக்கப்படுகிறது.

விளக்கம்:

பொய் கூறும் இயல்புடையார்க்குக் கல்விநலம் கைகூடாது; கைப்பொருளுக்கும் கேடுவரும்; எப்பொழுதும் துன்பங்கள் வந்தவண்ணம் இருக்கும். ஆதலால் பொய் கூறாதீர்கள் எனப்படுகிறது.

வாய்மை அறங்களுள் சிறந்ததாவது போன்று, பொய்ம்மை தீவினைகளுள் சிறந்ததாவதாலும், பொய்யராகிய தீவினையாளர்க்கு இடையறாது துன்பங்கள் வந்தவண்ணமிருக்கும் என்பதனாலும் நல்லில் செல்லல்களால் நலிவுண்டாம் என்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jul-19, 10:03 pm)
பார்வை : 76

சிறந்த கட்டுரைகள்

மேலே