ஆதிமதுரை
முப்படை யமைத்துக் களம்கண்ட
மீன்கொடி வேந்தனது தலைநகரம் !
முத்தமிழ்ச் சங்கம் முறையமைத்து
தாய்மொழிப் பேணியத் தமிழ்நகரம் !
மூவேந்தரும் முன்றிட்டு படையமைத்து
முக்குலம் வீற்றிருந்த வீரத்தாயகம் !
அகிலாளும் ஆதிசிவனும் தன்பாதம்
நொந்துத் திரிந்த திருஆலவாய் !
குன்றிலே குடிபுகும் குமரனும்
முதலா யாட்கொண்டக் குன்றகம் !
அறுபடையில் இருபடையும் தானுவந்து
வேலோன் அருளீன்ற “ஆதிமதுரையே” !
ஆயக்கலையை ஆண்டாய் காத்து
அடுத்தத் தலைமுறையேற்றிய மதுராநகர் !
இரவிலும் இமைக்காம. லியங்குவதால்
“தூங்கா நகர்” அடைபெற்ற பெருநகரம் !
ஆடவரை ஆட்கொள்ளும் பெண்டிரும்
அரிதிற் மனமயங்கும் “மல்லிகை மாநகர்” !
கைகொள்ள இயலாத நீர்வளத்தை
வைகையாய் தானேற்ற ஆடல்த்திருநகரம் !
எண்திசைக்கும் உயர்கோபுரமைத்து தன்திசைக்
கோர்த்த “மணிக்கோவில் திருநகரம்” !
ஏருதழுவி வாழ்வில் ஏற்றம்காணும்
குன்றா வீறுகொண்டயெம் “மருதை மாநகரே”!
- வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
மார்த்தட்டும் மதுரையோன் : மா. சங்கர்