மௌனக் கவசம்
திறந்து படிக்காமலே
உணரப்படும் நூலின் உன்னதமாய்
நீ பேசக்கூடியப் பேச்சுகளை
முன்கூட்டியே உன் மௌனத்தில் உணர்கிறேன்
உன் பேச்சுகள் குரலொலியானால்…
உன் மௌனம் என்ன சப்தத் திரையா?
கிடையாது.
உன் பேச்சுகளின் உச்சாடனக் காணொளியில்
உன் மௌனம் ஒரு நிசப்தக் காட்சி
உன் மௌனம் என்னோடும்
என் சப்தம் உன்னோடும் பரிமாற்றம் ஆகும்போது
என் கவிதைகள் நிராயுதபாணியாக
என் கற்பனைகள் உன்னுள் சரணடைகின்றன
உன் மௌனப் பட்டியலின் வினாக் குறியீடுகள்
முடிவடையும் விடைகளின்
புள்ளிகளை யாசித்து நிற்கின்றன
தவறி விழுந்த என் வார்த்தைகளை
நீ மௌனத்தில் மொழிபெயர்த்து உணர்த்தியதால்தான்
என் வாழ்க்கை தவறி விழாமல் தப்பித்தது