துயில் எழுவாய் கண்ணா

“அம்மா பசிக்குது....” என்று கத்திக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் கண்ணன்.
சமையல் அறையில் இருந்த அம்மா “ஏன்டா எத்தனை நாள் இப்படி பிசினஸ்
பன்னபோரனு சொல்லிக்கிட்டு சும்மாவே சுத்திகிட்டு இருப்ப. படிப்ப முடிச்சு
ரெண்டு வருஷம் ஆச்சு.ஒரு நல்ல வேலைக்கு போனா என்ன? எதோ உங்க
அப்பா போய் சேர்ரதுக்கு முன்னாடி ரெண்டு வீட்ட கட்டிட்டு போனாரு. அதுல
வர வாடகைய வச்சு உன்ன படிக்க வச்சுடன். இனிமே உன் வாழ்கைய நீதான்
பாத்துக்கணும்” என்று எப்போதும் போலத்தான் சொல்கிறாள் என்று நினைத்தான்
கண்ணன். அனால் அன்று கொஞ்சம் வார்த்தைகளில் உஷ்ணம் தெரிந்தது.
எப்போதும் கோபப்படாத கண்ணன் அன்று ரொம்ப பசியில் இருந்ததால் என்னவோ
அம்மா சொன்னது அவனுக்கு ரொம்ப கோபத்தை வரவழைத்தது.அம்மாவின்
கோபம் வைத்த சாப்பாட்டு தட்டின் வேகத்தில் தெரிந்தது. கண்ணன் சாப்பிட
தட்டில் கை வைத்த போது மறுபடியும் ஆரம்பித்தாள் அம்மா “ஏன்டா நான்
சொல்றது உனக்கு புரியுதா இல்லையா டா” என்றாள். அவ்வளவுதான் அவன்
கோவம் தட்டின் மீது பாய்ந்து தட்டு பறந்து சுவரில் இடித்து அறை முழுக்க
சோறு சிதறியது. அப்படி கண்ணன் கோபப்பட்டு அவன் அம்மா இதுவரை
பார்த்ததில்லை ஏன் அவனே பார்த்ததில்லை.அன்று இரவு கொஞ்சம் உஷ்ணம்
அதிகமாய் தெரிந்தது.கோபம் அவன் பசியை கொன்றது.வீடே நிசப்தமானது.
ஆனால் அவன் மனம் பூகம்பமாய் வெடித்து கொண்டிருந்தது.இன்னும் ஏன் நாம்
நினைத்ததை செய்ய முடியவில்லை .நமக்கு என்ன பிரச்சனை என யோசிக்க
ஆரம்பித்தான். “பேசாம எதாச்சும் வேளைக்கு போயிரலமா? பிசினஸ் ஒன்னும்
செட்டாக மாட்டங்கிது. என்ன பண்ணலாம்” என்று இரவு முழுக்க யோசிக்க
ஆரம்பிச்சான். யோசிச்சு யோசிச்சு சோர்ந்ததுபோய் கொஞ்சம் கண் அசர்ந்தான்.
நெடுந்தூக்கத்திற்கு பிறகு கண் விழித்து பார்த்தான். புது இடம் அவன் படுத்திருந்த
பஞ்சு மெத்தை அவனுக்கு புதுசாய் இருந்தது...அந்த அறை ரொம்பவும்
அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவன் முன் சுவற்றில் பெரிய LCD டிவி
பொருத்தபட்டிருந்தது .சுற்றி முற்றி பார்த்தான் கண்ணன். சற்று தயக்கத்துடன்
“இது யாரு வீடு" என்று கேட்டான். இடது புற சுவற்றில் ஓர் ஆள் உயர ஒரு பெரிய
புகைப்படம் பொருத்தபட்டிருந்தது. அருகில் சென்று பார்த்தான் “யாரு இது கோட் சூட்
எல்லாம் போட்டுக்கிட்டு...” அதில் Kannan CEO of ஜஸ்ட் கிளிக் டாட் காம்" என்று எழுதி இருந்தது.
அவனால் நம்ப முடியவில்லை “ஒரே இரவில் CEO வா? கண்டிபா கனவாகத்தான்
இருக்கும்” என்று நம்ப முடியாமல் ஆச்சர்யத்துடன் பார்த்தான்.”என்னுடைய
லட்சியம் இந்த ecommerce business இதற்குத்தானே இத்தனை நாள் அசைப்பட்டாய்”
என்று மனதில் எண்ணிக்கொண்டன். அவன் வலது புறத்தில் “Best ecommerce site
award” கேடையம் மேசை மேல் இருந்ததை கவனித்தான். ரொம்ப பெருமையாகவும்

சற்று குழப்பத்துடனும் பார்த்துகொண்டிருந்தான். யாரோ கதவை திறந்து உள்ளே
வருவதை உணர்ந்தான். “அம்மா......” என்றான். “கண்ணா... கண் முழிச்சிட்டியா பா”
என்றாள் ஆனந்த கண்ருணீ டன் அம்மா. “ என்னமா ரொம்ப எழச்சுட்ட? நேத்து
ராத்திரி நல்லாதான இருந்த” என்றான் கண்ணன். அம்மா சற்று புரிந்தவளாய்
என்னிடம் வந்து “கொஞ்சம் உக்காறு பா நான் எல்லாத்தையும் தெளிவா சொல்றன்.
முதல்ல ராதாவுக்கு போன் பண்ணி இந்த சந்தோஷமான செய்திய சொல்லிட்டு
வந்துர்ரன். பாவம் அவதான் ஆறு மாசமா ரொம்ப கஷ்டபட்டாள்”. உடனே கண்ணன்
“யாருமா ராதா?” என்றான் . “அடப்பாவி உன் பொண்டாட்டியே மறந்துட்டியா?
என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள் அம்மா.” என்னமா சொல்ற எனக்கு கல்யாணம்
ஆயிடுச்சா? குழப்பதுடன் யோசித்தான்.....”அம்மா எனக்கு என்னதான் ஆச்சு?
எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லையே” அம்மாவுக்கு அப்பொழுதுதான் டாக்டர்
சொன்னது ஞாபகம் வந்தது.கண்ணனுக்கு சுயநினைவு திரும்பும்போது அவனுக்கு
பழசெல்லாம் மறந்துபோயிடும். உடனே அம்மா கண்ணனிடம் ”கண்ணா உனக்கு
கடைசியா என்ன நியாபகம் இருக்கு? உடனே கண்ணன் “அம்மா நேத்து ராத்திரி
உன்கிட்ட சண்ட போட்டு தட்டை தூக்கிப்போட்டன்ல” என்று சொன்னவுடன் .அம்மா
அதிர்ச்சியானாள்....”கண்ணா அது நடந்து அஞ்சு வருஷம் ஆச்சுடா...” என்றாள்.
“என்னமா சொல்ற அஞ்சு வருஷமா????
அமாம் கண்ணா நீ விருப்பட்ட மாதிரி ecommerce பிசினஸ் ஆரம்பிச்சு அஞ்சு
வருஷமாச்சு. போன வருஷம்தான் உனக்கு கல்யாணம் ஆச்சு. ஆறு மாசத்துக்கு
முன்னாடி ஒரு கார் விபத்துல உனக்கு தலையில அடிபட்டு உன் சுயநினைவை
இழந்து நீபடுத்தபடுக்கை ஆயிட்ட. டாக்டர் உனக்கு சுயநினைவு எப்ப வேணாலும்
வரலாம் ஒரு மாசமோ ஒரு வருஷமோ ஆகலாம்னு சொல்லிட்டாரு. பாவம்
உன் பொண்டாட்டி ராதா போகாத
கோயில் இல்ல. இப்பகூட கோயிலுக்குத்தான் போயிருக்கா” என்றாள் அம்மா.
கண்ணனுக்கு இதை கேட்டதும் அதிர்ச்சியாவும் இருந்தது..ஆனந்தமாவும்
இருந்தது..அம்மா அவனிடம் கல்யாண போட்டோவை காட்டினாள். “பிகர்
நல்லாத்தான் இருக்கா...” என்று மனதுக்குள் நினைத்து கொண்டான். “நல்லா
மாட்சிங்கா தான் இருக்கா..ஆமாம் எங்க மேரேஜ் லவ் மேரேஜா? அரேன்ச்டு
மேரேஜா? என்று கேட்டான் கண்ணன். “அமாண்டா இப்ப ரொம்ப முக்கியம்”
என்றாள் சிரித்துகொண்டே அம்மா. கதவு திறக்கும் சத்தம் ராதா உள்ளே வந்தாள்.
கண்ணனை பார்த்ததும் அவளுக்கு வார்த்தை வரவில்லை.ஆனந்த கண்ருணீ டன்
“எனக்கு தெரியும் உங்களுக்கு சரியாகிடும்னு” என்றாள் ராதா. உடனே கண்ணன்
“எப்படி டா இருக்க? என்றான். உடனே அம்மா “டேய் உனக்குதான் எதுவுமே
நியாபகம் இல்லன்னு சொன்ன இப்ப மட்டும் எப்படி டா பொண்டாட்டிய மட்டும்
நியாபகம் வச்சிருக்க? என்றாள். உடனே கண்ணன் “மா...சின்ன பொண்ணு மா
தெரியலனு சொன்னா மனசு உடஞ்சு போய்டுவா மா” என்றான். உடனே அம்மா
“டேய் வலியுது நல்லா துடச்சிகோடா “ என்றாள்.

கண்ணன் சிரித்துக்கொண்டே தனக்கு நடந்ததை எண்ணி ரொம்பவே குழப்பதுடன்
இருந்தான். “அம்மா என்ன கொஞ்ச நேரம் தனியா விடுங்க எனக்கு ரொம்ப
டயர்டா இருக்கு” என்றான் கண்ணன். உடனே அம்மா “ சரிடா நீ கொஞ்சம்
ரெஸ்ட் எடுத்துக்கோ...வா ராதா நாம போலாம்...”
கண்ணன் தன் லட்சியம் நிறைவேறியதை நினைத்து பெருமைப்பட்டான். “ ஐயம்
வெரி ப்ரௌட் ஆப் மய்செல்ப்” என தனக்கே சொல்லிகொண்டான். ஆனால் நாம
அஞ்சு வருஷம் உழைச்சது எதுவுமே நியாபகம் இல்லையே” என்று வருந்தினான்.
அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது “ நாம மறுபடியும் அதே உழைப்பை
காட்டினால் இன்னும் அஞ்சு வருசத்துல இன்னொரு கம்பெனி ஆரம்பிச்சுரலாம்
என்ற யோசனையோடு திரும்ப படுக்க சென்றான். நிம்மதியாக உறங்கினான்
கண் விழிச்சு பார்த்தால் மீண்டும் அந்த பழைய வீடு மறுபடியும் காலையில்
அம்மா சுப்ரபாதம்.....”டேய் அப்படி என்ன சொல்லிட்டனு உனக்கு நேத்து அப்படி
கோவம் வருது...தட்டெல்லாம் பறக்குது.....மனுஷனா கொஞ்சம் ரோஷம் வேணும்
டா. இவ்ளோ நேரம் தூங்குநீன எப்படி உருப்பட முடியும்...பிசினஸ் பண்ணபோறனு
சொல்லுற காலையில சுறுசுறுப்பா சீக்கிரம் எந்திருச்ச தானே உருப்பட முடியும்”
என்றாள் அம்மா. கண்ணன் சற்று சலிப்போடு “அடச்சே எல்லாம் கனவா? அது
எப்படி நமக்கும் மட்டும் கனவு லாஜிக்கோட வருது. எத்தன தரவ கேட்டேன்
கனவானு...சே!”
உடனே அம்மா “டேய் நான் சொல்றது காதுல விழுதா? முதல்ல காலையில
சீக்கிரம் எழுந்த்ரி அப்பத்தான் உருப்பட முடியும். வாழ்க்கைல ஜெயிச்சவங்க
எல்லாரும் காலையில சீக்கிரம் எழுந்திருச்சவங்க தான். முதல்ல நீகாலையில
சீக்கிரம் எந்திருச்சி காமி. அப்ப நான் ஒத்துக்கிறன் நீஜெயுச்சிருவனு. டேய் ஒரு
ஆறு மணிக்கு எந்திரிடா அது போதும். காலையில கொஞ்சம் சூரியன பாருடா..
நீ கடைசியா எப்ப சூரியன பார்த்தனு நியாபகம் இருக்காடா?” என்றாள்.
அம்மா சொன்னது அவனுக்கு ரொம்ப அவமானமாய் இருந்தது. “கலையில
சீக்கிரம் எழுந்திரிக்கலனா உருப்பட முடியாதா என்ன...சீக்கிரம் எழுந்திருக்றது
அவ்வளவு கஷ்டமா என்ன....என்ன கலையில ஒரு ஆறு மணிக்கு எழுந்திரிகனும்
அவ்வளோதான... நாளைக்கு காலையில சீக்கிரமா எழுந்திருச்சு அம்மா முன்னாடி
நிக்கணும்” என்று உறுதியோடு இருந்தான் கண்ணன்.
பொழுது விடிந்தது என்ன ஆச்சர்யம் கண்ணன் நினைத்தது போலவே சீக்கிரம்
எழுந்தான். ஏன் இந்த மாற்றம் எல்லாம் அம்மாவுக்காக மணி ஆறு சூரியன் ஒளி
அவனை ரொம்ப புத்துணர்ச்சியாக்கியது.அதே சுறுசுறுப்புடன் அம்மாவை தேடி
ஓடினான் “அம்மா என்னமோ சொன்ன என்னால கலையில சீக்கிரம் எழுந்திரிக்க
முடியாதுன்னு இப்ப என்ன சொல்ற “ என்றான் கண்ணன். “சூப்பர் டா கண்ணா

என்னால நம்பவே முடியல டா... எல்லாம் ஓகே அது என்ன பேக்ரௌன்ட்ல கொர்...
கொர்...னு கொரட்ட சத்தம்??
திடுக்கென எழுந்தான் கண்ணன் “சே...இதுவும் கனவா?.....மணி பார்த்தான் 9 “ஐயோ
இன்னைக்கு ரொம்ப லேட்....அம்மா பார்த்தா பத்திரகாளி ஆயிடுவா...ஏன் இன்னைக்கு
சுப்ரபாதம் கேட்கல..ஏன் இன்னும் என்ன எழுப்பல....என்ற குழப்பத்தோடு அம்மாவை
தேடினான்.
“அம்மா...அம்மா...என்று தேடினான். அறையில் படுத்திருந்த அம்மாவை இன்னமுமா
எழுந்திரிகவில்லை என ஆச்சர்யத்துடன் பார்த்தான் “அம்மா என்னமா ஆச்சு இன்னும்
தூங்குற..” என்று அருகில் சென்று கேட்டான் கண்ணன். அசையாமல் படுத்திருந்த
அம்மாவை சற்று பயத்துடன் நெருங்கினான் “அம்மா....ஆ....” என்று கத்தினான். “ஏன்டா
நாயே எதுக்கு கத்துற கொஞ்சம் உடம்பு சரி இல்லைன்னு படுத்துருக்கன். தல வேற
வலிக்குது..” என்றாள் சோர்வுடன் அம்மா. அம்மா இப்படி உடம்பு சரி இல்லாமல்
சோர்ந்து படுத்து கண்ணன் பார்த்ததில்லை. கண்ணன் சற்று தளர்ந்த குரலில் “மா
எதாவது சாப்பிட எடுத்து வரவா...சூடா கஞ்சி எடுத்துட்டு வரவா? அதற்கு பதில் கூட
சொல்ல முடியாமல் தலையை மட்டும் ஆட்டினால் அம்மா. கண்ணன் அம்மாவிற்கு
தேவையான உணவை தயார் செய்தான்.அம்மாவிற்கு சூடான கஞ்சி கொடுத்துவிட்டு...
”அம்மா வா டாக்டர் கிட்ட போலாம்” என்றான்.அம்மாவின் பதில் எதிர்பாக்காமல்
உடனே மருத்துவமனை புறபட்டான் அம்மாவுடன். டாக்டர் கண்ணனிடம் “இது ஒரு
வைரல் பிவெர். ஒன் வீக் இந்த மருந்தை கொடுங்க..சரி ஆகலான நெக்ஸ்ட் வீக்
வந்து திரும்ப என்ன பாருங்க” என்றார்.
கண்ணன் வீட்டிற்கு வந்தவுடன் அம்மாவிடம் “ அம்மா ஒண்ணுமில்லை மா
உனக்கு ஒரு வாரத்துல சரியாகிடும்...நீ நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ...எல்லா
வேலையும் நான் பார்த்துக்கிறன்” என்றான். வீட்டு வேலைகள் அனைத்தும்
அவனே பார்க்க தொடங்கினான். அவனுக்கு பழக்கப்பட்டத வேலையாக
இருந்தாலும் பொறுப்புடன் செய்தான். அம்மாவை பார்க்காத சமையல் அறை
ஒரு வாரம் முடங்கிப்போனது.அம்மாவும் ஒரு வாரம் படுக்கை அறையில்
முடங்கிப்போனாள். அம்மாவின் நிலை மாற்றம் கண்ணனுக்கு எதோ வாழ்க்கை
நிலை மாற்றத்தை உணர்த்தியது.அம்மா இல்லாத அந்த நிலைமை அவனை
வெருமை ஆக்கியது. தூங்காமல் அடிக்கடி அம்மாவை போய் எட்டிப்பார்த்து
கொண்டிருந்தான். அவனுக்கு தூக்கமே வரவில்லை. அதிகாலையில் எந்த ஒரு
உந்துதல் இல்லாமல் தானாகவே எழுந்துவிட்டான். ஐந்தரை மணிதான் ஆச்சு
...வாசலில் இருக்கும் பால் பாக்கெட்டை எடுத்து..பால் காய்ச்ச தொடங்கினான்.
அம்மாவிற்கு தேவையான உணவை சமைத்தான்.
அம்மா உடல் நாளுக்கு நாள் தேறியது. “அப்பாடா அம்மாவுக்கு உடம்பு சரியாகிட்டு
வருது” என்று கண்ணன் சந்தோஷப்பட்டு கொண்டான்.இன்னும் சுறுசுறுப்பா
அம்மாவை கவனித்தான். அம்மாவும் அவனை கவனித்தாள்....அவன் இப்படி
பொறுப்பாய் இருப்பதை கவனித்தாள்.மனதிற்குள் சந்தோஷப்பட்டு கொண்டாள்.
“கண்ணன் நிச்சயம் பெரிய ஆளாக வருவான்” என்று அம்மாவிற்கு நம்பிக்கை
வந்தது.
ஒரு வாரம் கழித்து அம்மா மெல்ல தன் அறையை விட்டு வெளியே வந்தாள்.
அம்மாவிற்கு அத்தனை ஆச்சர்யம் வீட்டை அவ்வளவு சுத்தமாகவும் அழகாகவும்
வைத்திருந்தான் கண்ணன். கண்ணனை நினைத்து பெருமைப்பட்டாள்.
வழக்கம்போல காலை ஐந்து மணிக்கெல்லாம் கண்ணன் எழுந்து வாசலில்
இருந்த பால் பாக்கெட்டை எடுத்து சமையலரை விரைந்தான். அவனை
வாசலில் மறித்தாள் அம்மா. “டேய் குடுடா அந்த பால் பாக்கெட்டை..இவரு
பெரிய இவரு...” என்று செல்லமாக தலையில் தட்டினாள். “டேய் போடா போய்
ராஜாவாட்டம் உக்கார்ந்துகிட்டு பேப்பர் படிச்சுகிட்டு இரு..அம்மா உனக்கு காபி
போட்டு எடுத்துட்டுவரன்” என்ற பழைய அம்மாவை மீண்டும் பார்த்தான்
கண்ணன். அம்மா சமையல் அறை நுழைந்தவுடன் எல்லா பாத்திரமும் கைத்தட்டி
ஆரவாரத்துடன் அம்மாவை வரவேற்தது.கண்ணன் உற்சாகத்துடன் பேப்பரை
புரட்டிகொண்டிருந்தான்.தான் பண்ண விரும்பும் பிசினஸ் பிளான்கள் எல்லாம் ஒரு
வெள்ளை தாளில் எழுதி வைத்திருந்தான்.அதில் எதை தேர்வு செய்ய வேண்டும்
என யோசித்து கொண்டிருந்தான். அம்மா காபியை கண்ணன் முன் நீட்டினாள்.
அந்த காபி வாசம் அவனை பருக இழுத்தது.காபியை வாங்கி “சொர்ர்ர்ர்ர்ர்.....னு”
ஒரு இழு இழுத்தான்.....அவ்வளவுதான் ஒரு மின்சார சக்தி உடம்பில் இருந்து
மூளைக்கு பாய்ந்தது. குழப்பம் இன்றி ஒரு முடிவுக்கு வந்தான். அவன் பிசினஸ்
பிளான்களில் ஒன்றை தேர்வு செய்தான். அதான் அவனது “ecommerce ஜஸ்ட் கிளிக் டாட் காம்”
அதை டிக் செய்துவிட்டு எழுந்து வெற்றி பாதையை நோக்கி நடந்தான்........

எழுத்து
அசுரா

எழுதியவர் : அசுரா (21-Oct-19, 11:19 am)
சேர்த்தது : அசுரா
பார்வை : 238

மேலே