கம்ப ராமாயணத்தின் கவி அழகும், நயமும் - பாடல் 02 சீதாப் பிராட்டியின் துயர்நிலை
கம்பராமாயணத்தின் சுந்தர காண்டம், காட்சிப் படலத்தில் அனுமன் அசோக வனத்தை அடைந்து சீதாப் பிராட்டியின் துயர்நிலையைக் காணும் காட்சி:
கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் வரலாம்)
விழுதல், விம்முதல், மெய்உற வெதும்புதல், வெருவல்,
எழுதல், ஏங்குதல், இரங்குதல், இராமனை எண்ணித்
தொழுதல், சோருதல், துளங்குதல், துயருழந்(து) உயிர்த்தல்,
அழுதல், அன்றிமற்(று) அயலொன்றும் செய்குவ(து) அறியாள். 5
- காட்சிப் படலம், சுந்தர காண்டம், இராமாயணம்
பொருளுரை:
”பிராட்டி பூமியில் விழுந்து தேம்பி அழுதாள்; உடல் வெப்பம் ஆகி வாடினாள்; அஞ்சி அஞ்சி எழுந்தாள்; ஏக்கத்துடன் வருந்தினாள்; இராமபிரானை நினைந்து வணங்கினாள்; மனமும் உடலும் தளர்ந்து உடல் நடுங்கினாள்; துன்பத்தால் மனம் வருத்தமுற்று பெருமூச்சு விட்டு அழுதாள்; இத்துயரச் செயல்களைத் தவிர வேறு பிற செயல்கள் எதுவும் செய்வது அறியாமல் இருந்தாள்”.
காளியப்பன் எசேக்கியல் • 04-Jan-2014 9:36 pm
சீதை, எதுவும் செய்வது அறியாமல் இருந்தாள்” என்று சொல்ல வந்த கம்பர் அடுக்கும் வார்த்தைகள் இங்கு படித்துணர்ந்து அனுபவிக்க வேண்டியவை.
Dr.V.K.Kanniappan • 04-Jan-2014 10:48 pm
கணவனைப் பிரிந்த மனைவியின் ஆற்றாமையை பலவித உணர்வு வெளிப்பாட்டைத் தெரிவிக்கிறார். சொல்நயமும், கவிதை நயமும் மிகவும் ரசிக்க வேண்டியவை.