சிறுகதையை பற்றி டாக்டர் வாசவன்
சிறுகதையை பற்றி டாக்டர் வாசவன்
சிறுகதை எழுதுவது எப்படி? மூன்று காலகட்டங்களில் சொல்லலாம்.
முதல் காலம் பாரதியார் வாழ்ந்த காலம். கடல் தாண்டி வந்து தமிழ் மண்ணில் தவழ ஆரம்பித்த தொடக்க காலம். கிரிக்கெட்டுக்கு கணக்கு உண்டு, கிட்டிப் புள்ளு விளையாட்டுக்கும் கணக்கு உண்டு ஆனால் இந்த ‘சிறுகதைக்கு’ திட்டவட்டமான வரைமுறை இல்லாமல் தமக்கு தோன்றிய விதத்தில் எழுத்தாளர்கள் சிறுகதை சொல்ல ஆரம்பித்தார்கள்.
மணிக்கொடி காலம். நிஜ வாழ்க்கையின் நிகழ்வுகளும் நெஞ்சத்தின் வருடல்களும், நெருடல்களும் கதைகளாக சொல்லப்பட்டன.ஆரம்ப காலத்தில் வாத்தியார் பிரம்பை கையில் வைத்து கொண்டு ‘வாத்தியார்த்தனம்’ செய்து பயமுறுத்திய சிறுகதைகள் ‘மணிக்கொடி’ காலத்தில் வாசகர்களின் அருகில் நின்று பேசியது.
மூன்றாவது காலகட்ட சிறுகதை அதன் எல்லைகளையும் இலக்கு களையும் விரிவாக்கியபடி இருந்தது. அதன் பார்வை ‘சமூகப்’ பகுதிகளில் சஞ்சரித்தது. அவசியங்களும் அநாவசியங்களும், அவலங்களும் சிறுகதையின் கருக்களாக உருப்பெற்றன.
அடுத்த காலகட்டமாக ‘உரத்து பேசும்’ சிந்தனைகளாக வெளிப்பட்டன இந்த சிறுகதைகள். “புதிய அலை” என்னும் கவர்ச்சிகர உடையை அணிந்து கொண்டது.கற்புக்கு புதிய விளக்கங்கள் தரப்பட்டன. அடக்கப்படவேண்டிய உணர்ச்சிகளுக்கு ‘மகுடாபிசேகம்’ செய்யப்பட்டது.
அதற்கு பிறகு வேகம் தணிந்து வாசகர்கள் எழுத்தாளர்களிடம் பெரிதாக எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டது, அதை திருப்தி செய்யும் நிலையில் எழுத்தாளர்கள் இருந்தார்கள்.
தெளிவான பார்வை, புரியும்படியான,நடை சுவையான எழுத்து, இவைகள் வாசகர்களாய் ஈர்க்கும். தரமான வாசகர்களை விட சராசரி வாசகர்களே அதிகம் என்பதை மறந்து விட கூடாது. அவர்களை திருப்தி படுத்துவது அத்தனை எளிதல்ல. உங்கள் கதைகளை படிக்க அவர்கள் ஒற்றை காலில் தவம் இருப்பதில்லை.பொழுது போக்காக படிப்பவர்கள் உங்கள் கதையையும் புரட்டலாம்.அப்படியே அலட்சியமாக புரட்டுபவர்களை சிறை செய்து நிறுத்த கூடிய ஈர்ப்பு உங்கள் படைப்பில் இருக்க வேண்டும்.
‘புத்தி’ என்றால் ‘உத்தி’ என்று ஒன்றிருக்கிறது. உங்களுக்கு ஒரு வழியும், ஒரு மொழியும் பெற்றிருக்க வேண்டும். வழி என்பது பாணி, மொழி என்பது நடை.
எல்லாம் சரிதான் எதை சிறுகதையாக எழுதுவது? ஒரு கேள்வி வந்தால் உங்கள் பதில் எதை சிறுகதையாக எழுத கூடாது? நீங்கள் பார்க்கிற பாதிக்கிற ஒவ்வொரு நிகழ்ச்சியுமே சிறுகதைதான். சமூகத்தை எழுத்தில் படம் பிடிக்க தெரியாத படைப்பாளி இன்றைக்காக வாழ்பவன் அல்ல, நேற்றுக்காக நேற்றே எழுதி முடித்து விட்டவன்.
சிறுகதையின் ‘பகையாளி’ ஒன்று உண்டு அதுதான் “புதுகவிதை” அது தன்னை கவிதை என்று சொல்லி கொண்டாலும், கதையை போலவே கருக் கொண்டு வசனம் பேசுகிறது. அதன் வடிவம் ‘கடுகை’ போன்றது, ஆனால் அதன் சக்தி ‘ராக்கெட்டை’ ஒத்தது.
இந்த புதுக்கவிதையை வெல்ல வேண்டுமானால் அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. அதை போலவே ‘சுருக்’கென்றும் ‘நறுக்’கென்றும் கதையை சொல்ல தெரிந்திருக்க வேண்டும்.
மொத்தத்தில், காலத்தில் வாழ்வது, காலத்தோடு வாழ்வது காலம் முழுவதும் வாழ்வது, இந்த மூன்றையும் கொண்டதாக சிறுகதையின் நோக்கம் இருக்க வேண்டும். கூரிய நோக்கம், உயர்ந்த இலக்கிய பிரக்ஞையும், உள்ள படைப்புக்கள் இன்று வாழ்ந்து கொண்டே நாளைக் காகவும் வாழும்.
மதிப்பிற்குரிய படைப்பாளியே இலக்கியத்தை நீ ஆள்வதால் நீயே ஆண்டவன், நல்ல வரவுகளை கொடு. மனித குலம் நேர்மையாகவும் சீர்மையாகவும் வாழட்டும்.