354 நற்பண்பு உள்ளாரையே மக்களென நவில்வர் - பிறர்க்குத் தீங்கு செய்யாமை 2

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் வரலாம்)

படியின்மா னிடர்மிகு பண்பு ளோரலாற்
கொடியரை நரரெனக் கூறல் பாரெலாம்
இடியெனக் கொலைத்தொழி(ல்) இயற்றுந் தீவெடிற்
பொடியினை மருந்தெனப் புகல லொக்குமே. 2

- பிறர்க்குத் தீங்கு செய்யாமை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”உலகத்தில் மக்களில் நல்ல பண்புள்ளவர்களை மானிடர் என்று சொல்லப்படுகிறது.

கொடியவர்களை மக்கள் என்று சொல்வது, உலகெல்லாம் இடியைப் போல கொல்லும் தொழிலைச் செய்யும் தீய வெடியுப்புப் பொடியினை உயிரைக் காக்கும் மருந்து என்று சொல்வதற்கு ஒப்பாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

மானிடர் - மக்கள். நரர் - மக்கள்.
வெடில் - வெடியுப்பு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-May-20, 8:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே