குமரேச சதகம் – யாக்கை நிலையாமை - பாடல் 71

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மனுநல்மாந் தாதாமுன் ஆனவர்கள் எல்லோரும்
மண்மேல் இருந்துவாழ்ந்து
மடியாதி ருந்தபேர் இல்லையவர் தேடியதை
வாரிவைத் தவருமில்லை

பனியதனை நம்பியே ஏர்பூட்டு கதையெனப்
பாழான உடலைநம்பிப்
பார்மீதில் இன்னும்வெகு நாளிருப் போமென்று
பல்கோடி நினைவையெண்ணி

அனிதமாய் விருதாவில் மாய்வதே அல்லாமல்
அன்பாக நின்பதத்தை
அர்ச்சித்து முத்திபெறல் வேண்டுமென் றெண்ணார்கள்
ஆசைவலை யிற்சுழலுவார்

வனிதையர்கள் காமவி காரமே பகையாகும்
மற்றுமொரு பகையுமுண்டோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 71

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

மனு என்னும் அரசனும் நற்குணமுடைய மாந்தாதா முதலானவர்கள் எல்லாரும் மண்ணுலகில் நீண்ட நாள் இருந்து வாழ்ந்தாலும் இறவாமல் இருந்தவர்கள் எவரும் இல்லை; (சிறிது சிறிதாக) சேர்த்த பொருளைத் (தம்முடன் எடுத்துச் செல்ல) அள்ளி வைத்தவர்களும் இல்லை;

பனி பெய்ததால் ஈரமிருக்கும் என்று நம்பிக்கை வைத்து ஏரைப் பூட்டும் அறிவின்மை போல அழியும் உடலை (நிலையானது என்று) நம்பிக்கை கொண்டு உலகிலே மேலும் நீண்டகாலம் வாழ்வோம் எனப் பல கோடிக்கணக்கான நினைவு கொண்டு, நெறிகெட்டு வீணில் இறப்பதே அன்றி அன்புடன் உன் திருவடியில் மலரிட்டு வணங்கி வீடு அடையவேண்டும் என நினையார்கள்; ஆசையாகிய வலையில் அகப்பட்டுத் திகைப்பார்கள்;

(அவர்களுக்குப்) பெண்களைக் காமநோக்குடன் பார்ப்பதே கெடுதி தரும்; வேறொரு பகை இல்லை.

விளக்கவுரை:

மனு - மனிதர்களின் முதல் தந்தை; மாந்தாதா - ஒரு சிறந்த அரசன்.

கருத்து:

உடலுள்ள போதே அறம்புரிந்து நன்மையடைய வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jul-20, 11:25 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே