இதயத்தின் ஓசை
ஒரு சொல்லை உனக்கென
எடுத்து வைத்தேன் -அதில்
ஓராயிரம் காதலை
தொடுத்து வைத்தேன்...
என் எண்ணங்களை
ஆவணப்படுத்த
ஏகாந்த சொற்களை
அடுக்கி வைத்தேன்....
அதில்..,
அங்கங்கே ஆசையையும்
தூவி வைத்தேன்....!
அடிக்கொரு முறை அதன்
ஆழத்தினில் மூழ்கிப்பார்த்தேன்...
இமைகளுக்கு ஓய்வு தராது-
இதழ்களை மூடியே பாடி வைத்தேன்...
மழையின் வரவை
மனையாளுக்குத்தெரிவிக்கும்
தவளைகள் சப்தத்தின் நடுவே...
நகராத இரவுப்பொழுது
நரகமாய் எனை வாட்டிட....
உனக்கு கொடுக்க இயலா
கடிதத்தின் வரிகளை வாசிக்கிறது
என் இதயத்தின் ஓசை...!