தமிழரென்று தனித்துவமாய் வாழ்க

***************************************************

​நிறைவேறா ஆசைகள் ஆயிரமுண்டு
நிறைவேற நினைக்கும் நெஞ்சமுண்டு !
நிறைவேற்றத் துடிக்கும் எண்ணமுண்டு
நிறைவேறிட பாதை வகுப்பதுமுண்டு !

பணிபுரிந்த நாட்களை நினைப்பதுண்டு
பணியோடு பின்னிப் பிணைந்ததுண்டு !
பணிசெய்த இடங்கள் நினைவிலுண்டு
பணிக்கால சுகங்கள் நெஞ்சிலுண்டு !

மகிழ்ந்தத் தருணங்கள் மறப்பதில்லை
மகிழ்ந்தப் பொழுதுகள் அளவில்லை !
மகிழ்ந்த நிகழ்வுகள் நீடிக்கவில்லை
மகிழ்ந்த காலங்கள் திரும்பவில்லை !

விருப்பங்கள் நிறைந்தது எனதுள்ளம்
நடக்குமா நிச்சயம் என்வாழ்வில் !
மறுக்கவில்லை நானும் சராசரிதான்
பிறப்பிலும் நானொரு சாமானியனே !

சாதிமதங்கள் மறைந்திட வேண்டும்
சமூகநீதி தழைத்திட வேண்டும் !
இல்லாமை ஒழிந்திட வேண்டும்
இன்பமே நிலைத்திட வேண்டும் !

பகுத்தறிவோடு பண்பும் இணைந்து
நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லவராய்
ஈரநெஞ்சுடன் இனமான உணர்வுடன்
தமிழரெனும் தனித்துவமாய் வாழ்க !

பொதுநலம் என்பது கானல்நீரானது
சுயநலம் ஒன்றே குறிக்கோளானது
கொள்கைகள் இல்லாத கட்சிகள்
குற்றங்கள் கூடுகின்ற காட்சிகள் !

வல்லரசு நாடென்று கூறஇயலாது
வல்லூறுகள் நிறைந்த இடுகாடானது
பொல்லாத கொரானாவும் சூழ்ந்துள்ளது
பொறுமையுடன் வாழ்வது அவசியமானது !

தமிழகத்துப் பெருமைகள் மறைகிறது
தன்மானம் படிப்படியாய் குறைகிறது
தலைமுறைகள் தழைத்தும் பலனில்லை
நடைமுறைகள் மாறுவதால் நல்லதில்லை !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (22-Jul-20, 8:49 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 633

மேலே