சில சொற்களும் அவற்றுக்கிடையேயான பொருள் ஒற்றுமையும்
ஒரு சொல்லோ அல்லது சொற்றொடரோ பல பொருள் படும்படி அமைவதை தமிழில் ' சிலேடை ' என்று அழைக்கப்படுகிறது . அதே போல கீழே விவரிக்கப்போகும் வார்த்தைகள் தமிழ் இலக்கிய சிலேடைகள் அல்ல மாறாக நாம் அன்றாடம் பயன்படுத்திடும் சொற்களே . அவற்றில் இருக்கும் சிலேடை நயத்தை அல்லது பொருள் - செயல் ஒற்றுமையை இங்கே கற்பனை செய்து கொடுக்கப்பட்டுள்ளது .
குப்பை - பிரச்சனை : இரண்டையுமே மனிதர்கள் கண்ட இடங்களில் எல்லாம் கொட்டி விடுவதால் பலரின் நிம்மதி கெட்டுப்போகிறது .
வானவூர்தி -- வாழ்க்கை : இரண்டுமே மேலெழும்புவது விருப்பமாக இருப்பினும் தரை இறங்குவது கட்டாயமாகும் .
கல் - சொல் : இரண்டுமே இலக்கின்றி வீசப்படும் போதெல்லாம் யாரோ சிலரைக் காயப்படுத்தி விடுகிறது கண்டிப்பாக .
தனிமை -- பயணம் : தாங்கமுடியாத சோகம் ஏற்படும் போதெல்லாம் அதை நீர்த்துப் போக செய்யும் மருந்து .
நெகிழி (பிளாஸ்டிக் ) -- காதல் -- ஒரு முறை உருவாகிவிட்டால் பிறகு அழிக்கவே முடிவதில்லை .
மனநிலை -- வானிலை ; எப்போதுமே ஒரே மாதிரியாக இருப்பதில்லை . தொடர்ந்து மாறிக்கொண்டே தான் இருக்கிறது .
சினம் -- அழுகை : மனம் சோர்வாக இருக்கும் போதெல்லாம் சட்டென வெளியே வந்துவிடுகிறது .
உண்மை -- கற்பனை : எவர் உதவியும் தேவையின்றி இயல்பாக மனதினுள் தோன்றும் அழகான ஒன்று .
விக்கல் -- சிக்கல் : தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்போது மனிதர்கள் விரைவில் சோர்ந்து போய்விடுகிறார்கள் .
பெருமை -- மிதிவண்டி : காலில் போட்டு மிதிக்கும் போதெல்லாம் மனிதன் முன்னோக்கியே போகிறான் .
நன்றி திரு அகன் சரவணன் !