ஆறாம் வகுப்பு ஆ பிரிவு

வெள்ளை நீலம் கோடு போட்ட சட்டை!
முதுகில் ஒரு பொதிமூட்டை!
கையில் ஒரு சாப்பாட்டுக் கூடை!
காலில் கருப்பு கலர் ஷூ!


அறியாத வயதில் கிடைத்த
அழகான உறவு அவள்..


உலகம் தெரியா பருவத்தில்
உடன் படித்த பந்தம் அவள்..


அன்பான பேச்சால்
அகிலம் தாண்டி அழைத்துச் சென்றவள்


பாசம் என்னும் பள்ளியறையில்
அவளோடு பயின்ற சில காலம்
புல்லின் நுனியில் ஒட்டிக்கொண்டிருக்கும்
பனித்துளிப் போல்
அவள் நினைவின் துளிகள்
என் மனதினில் ஒட்டிக் கொண்டது..!


என் அருகினில் அவள் இருக்க
பல கதைகள் பேசி சிரிக்க
டியுசன் சென்டர் கூட
டூரிஸ்ட் இடமாக மாறியது!!!


எனக்கும் அவளுக்குமான சொந்தம்
பள்ளியில் தொடங்கி!
பள்ளியிலேயே முடிந்தது!


காலம் எனும் சுழல் கடிகாரத்தால்
அன்று எதிர்பாரமல் பிரிந்தோம்...


என் வானில் தோன்றிய
அழகு வானவில் "அவள்"
என் நாட்களை வண்ணமயமாக மாற்றி
மறைந்து சென்று விட்டாள்..
மறைந்த அவளை தேடித் திரிந்த எனக்கு
ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது..!


அதன் பின் என் வானில்
பல வானவில்கள் தோன்றி மறைந்தது
ஆனால் என் மனம் என்னவோ
அவளை காண வேண்டி நின்றது!!!


அவளை காண வழிகள் பல இருந்தும்
உள்ளம் ஏனோ தடுத்துக் கொண்டது..


மேகத்தில் மறைந்திருக்கும்
மழைத்துளியாய் "அவள்"
எப்பொழுது வெளி வருவாள்
என்று காத்திருந்த
வானம் பார்த்த பூமியாய் "நான்"
வருடங்கள் பல கடந்தும்
கன்னி அவளை
என் கண்கள் காணவில்லை
வறண்டு போனது என் இளமை
அவளை காணமல்
துவண்டு போனது என் இதயம்...!


சரி அவ்வளவு தான் என
வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டத்தை
நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்தேன்..
அவ்வப்போது அவளை நினைத்தும்
கொண்டிருந்தேன்..


என்றாவது ஒரு நாள்
பாத்திடமாட்டேனா..
நான் யார் தெரிகிறா? என்று
கேட்டிடமாட்டேனா..
மனம் விட்டு பேசிடமாட்டேனா..
என்ற ஏக்கத்தில் நான் இருந்தேன்..!


அவள் என் வாழ்வை விட்டு பிரிந்து
பதிமூன்று ஆண்டுகள் கடந்தும்
பசுமையான நினைவுகளாய்
என் நெஞ்சில் படர்ந்திருக்கிறாள்...


நான் எதிர்பார்த்த அந்த நாள் வந்தது
அவளை நேரில் காண முடியவில்லை
கடல் கடந்து வாழ்ந்து
கொண்டிருக்கிறாள்
நான் யார் என்பதையே மறந்து
நலமாக இருக்கிறாள்
என்ற செய்தி என்னை வந்து சேர்ந்தது..!


வாழ்வில் கடந்து வந்த பாதையை
எல்லாராலும் எல்லாவற்றையும்
ஞாபகம் வைத்துக் கொள்ள
முடியாதல்லாவா என்று சொல்லி
மனதை தேற்றிக் கொண்டேன்!!!!


அவளை படவரியில் கண்டேன்
பால் முகம் பார்த்ததும்
பட்டென்று சிரித்துக் கொண்டு
விழிகள் தாண்டி வெளியே வந்தது
கண்ணீர் துளிகள்
வழியும் துளிகளை துடைக்க
விரல்கள் ஏனோ முன்வரவில்லை..!


என்னுள் ஏதோ
இனம்புரியாத ஓர் உணர்வு
அதை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை
மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டேன்..!


ரெட்டை ஜடை கட்டி
குழந்தையாய் இருந்தவள்
இப்போது குமரியாய் மாறி
கையில் ஒரு குழந்தையோடு நிற்கிறாள்
நான் வாயடைத்து போனேன்
எல்லாம் காலம் செய்த மாயம்!!!!


அவள் மீது நான் கொண்ட நேசம்
நட்பா..?
காதலா..?
சகோதரியா..?
எது என்று தெரியவில்லை
அவ்வுறவிற்கு பெயர் எதுவும்
நான் வைக்கவில்லை..
இனியும் வைக்க போவதுமில்லை..!


அன்றும்!இன்றும்!என்றும்!
அந்த குட்டி முகம்
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவ்வளவுதான்..😍


இது வெறும் கற்பனை கவிதையல்ல
என் வாழ்க்கை என்னும் புத்தகத்தின்
ஒரு சில பக்கங்கள்!!!


கவிதைகளின் காதலன்
❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (8-Sep-20, 1:18 pm)
பார்வை : 408

மேலே