வீதி விடங்கா - நேரிசை வெண்பா
திருவாரூர்த் தியாகேசப் பெருமானுக்கு வீதி விடங்கன் என்பதும் ஒரு திருப்பெயர்; உளியாற் செதுக்கி அமைக்கப் பெறாது, தானே கிளைத்த விடங்கம் பெருமானின் திருமேனி என்பது ஐதிகம். திருவாரூர்ப் பெருமானைத் தரிசிக்கச் சென்ற கவிஞர், பெருமானின் சிறப்பை இவ்வாறு பாடுகின்றனர்.
நேரிசை வெண்பா
சேலை யுடையழகா தேவரகண் டாகழுநீர்
மாலை யழகா மணிமார்பா - வேலை
அடங்கார் புரமெரித்த வாரூரா வீதி
விடங்கா பிரியா விடை. 210
- கவி காளமேகம்
பொருளுரை:
"மாதொரு பாகனாகி அதனால் ஒரு பாகத்தே சேலையும் உடையாக விளங்க வீற்றிருக்கும் அழகனே! தேவர்களாலும் அளந்து அறிதற்கு ஒண்ணாத பெருமானே! செங்கழு நீர் மாலையை அணிந்திருக்கும் அழகனே!
அழகிய மார்பகத்தை உடையோனே! கடல் போன்று அடக்கமின்றி ஆர்ப்பரித்துத் திரிந்த முப்புரத்து அசுரர்களின் கோட்டைகளைச் சிரித்தே எரித்தருளிய சிவபிரானே!
திரு ஆரூரனே! வீதி விடங்கனே! நின்னைப் பிரியாமல் என்றுஞ் சுமந்திருக்கும் பேறு பெற்றது நின் இடபம் அல்லவோ" என்பது பொருள்.