தப்பிக்க முடியாது

எங்கோ இரவுப் பறவை ஒன்று கத்தியபடியே பறந்து போனது. சுற்றிலும் இருள் கவிந்திருக்க, ராக்கோழி விட்டு விட்டுக் கத்திக் கொண்டிருந்தது. அந்த பாதையின் ஓரத்தில் போனால் போகிறதென்று மின்சாரவாரியம் அமைத்திருந்த தெருவிளக்கு, வெளிச்சம் கொடுக்க சோம்பல் பட்டு அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருந்தது. ஆளரவமற்ற அந்த பாதை இருட்டடித்த அமைதியோடு இருக்க. அவன் தன்னந்தனியே நடந்து கொண்டிருந்தான். அவனது செல்பேசி அந்த இரவில் “மரிக்கொழுந்தே என் மல்லிகைப்பூவே” என்று பாடிக் கொண்டிருக்க. பதிலுக்கு பாடுவது போல சுவர்க்கோழிகள் “கர்க் கர்க்” என்று கத்திக் கொண்டிருந்தன.



எங்கிருந்தோ நாயின் ஊளை தீனமாய்க் கேட்க, நடந்து கொண்டிருந்தவன் சுற்றுமுற்றும் பார்த்தபடியே நின்றான். அவனுக்குத் தெரியும். அருகே சுடுகாடு இருப்பது. தனது செல்பேசியில் பாடலை நிறுத்தியவன், சற்றே வேகமாய் நடையை எட்டிப்போட்டான். சுடுகாட்டைத் தாண்டி தான் ஊருக்குள் நுழைய முடியும். சுடுகாடு இருந்த திசைக்கு எதிர்திசையில் முகத்தைத் திருப்பி கொண்டு நடந்தவனை “கிரிச்...” என்று சுடுகாட்டின் கேட் திறக்கும் சத்தம் கேட்டு கேட்டை நோக்கி முகத்தைத் திருப்பினான். கேட் வீரியத்திறந்து கிடந்தது. உள்ளே பிணம் எரிந்து கொண்டிருந்தது போலும். புகைந்து கொண்டிருந்தது. பயத்துடன் அதைப் பார்த்தான். கண்களை மூடிக் கொண்டு மேற்கொண்டு நடக்க முனைந்தவன் திடுக்கென்று கேட்ட அந்த சத்தத்தைக் கேட்டு நிமிர்ந்தான்.



“ஹா ஹா ஹா” யாரோ சிரிக்கும் சத்தம். உயிர்நாடி ஒடுங்கிப்போனான். சிறுவயதில் கேட்ட பேய்க் கதைகள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வர, நினைவுக்கு வந்த சாமிகளின் பெயரைச் சொல்லிக் கும்பிட்டான். மேற் கொண்டு நடக்க அடுத்த அடியை எடுத்து வைத்தான்.



“ர்ர்ர்ர்... சத்தம் வர மெல்லத் திரும்பினான். பின்னால் யாரையும் காணோம்.! ஆனால் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்ட, சற்றே வேகமாய் நடக்க ஆரம்பித்தான்.



“ஹா.. ஹா..ஹா..” என்று சிரிப்புச் சத்தம் மேற்புறம் அதிகமாய்க் கேட்க பயத்துடன் மேற்புறம் பார்த்தான். பார்த்தவன் மிரண்டான். மேலே அது பறந்து வந்து கொண்டிருந்தது. அதன் வெண்ணிற ஆடை காற்றில் பறக்க, அதன் கண்கள் சிவப்புத்துண்டுகளாய் எரிந்து கொண்டிருந்தது. கூடவே திகலூட்டும் படியான அதன் சிரிப்புச் சத்தம். முகம் பயமுறுத்தும்படி அசிங்கமாய் இருக்க, இரு கைகளையும் “வா..” என அவனை நோக்கி நீட்டியபடி அவனை நோக்கி பறந்து வந்தது.



“ஆ.. அய்யோ, பே...ய்” என்று அவனின் அலறல் சுற்றுபுறத்தைக் கதி கலங்க வைத்தது. அங்கு வைத்து ஓடியவன் தான். அவன் வீட்டு வாசலில் போய் தொபீர் என விழுந்தான்.



மறுநாள் ஊரெல்லாம் இதே பேச்சாக இருந்தது. “நம்ம முருகன் பயல சுடுகாட்டுல பேய் துரத்துசாம்” வீட்டுக்கு வீடு இதைப்பற்றி பேசிப் பேசி மாய்ந்து போனார்கள். வெறும் வாய்க்கு மெல்ல அவல் கிடைத்தால் ஊர் சும்மா விடுமா.? இரவு நேரங்களில் மக்கள் வெளியே வர பயந்தார்கள். சுடுகாட்டுப் பக்கம் போகவே யோசித்து வேறுவழியாக சுற்றிப் போனார்கள். அதற்குப் பின்னான நாட்களில் இரவு நேரங்களில் பல வீட்டுக் கதவுகள் தட்டப்பட்டன. திறந்து பார்த்தால் யாரும் இல்லை. மக்கள் இது அந்த சுடுகாட்டுப் பேயின் வேலை என நம்பினார்கள். வீட்டு வாசலில் வேப்பிலைக் கொத்தைக் சொருகி வைத்தார்கள். இரவானாலே ஊரில் ஆட்களின் நடமாட்டம் குறைந்தன.

--------------×--------------× --------------× -----------×----------------

அந்த முன்னணி பத்திரிகை அலுவலகத்தில்..



“டேய் விக்கி இந்த செய்திய பார்த்தியா.? இந்த நூற்றாண்டுலயும் பேய் இருக்குனு நம்புறானுங்க.” என்றான் குமார்.



“இவங்க கிட்ட சாமி இருக்குனு சொன்னா கூட அவ்வளவா நம்பமாட்டாங்க. இந்த ஆவி பேய் விசயத்த வச்சி எதை சொன்னாலும் நம்பிடுறாங்க.”



“ஏண்டா விக்கி நீ தான் நிறைய படிப்பியே நீயே சொல்லேன். இந்த ஆவி பேய்லாம் இருக்கா இல்லையா.?”



“குமார் படிச்ச நீயே இப்படி ஒரு கேள்விய கேக்குறது தான் எனக்கு ஆச்சரியமா இருக்கு.”



“நானும் பேய்ன்னு எதுவும் இல்லைன்னு நம்புறேன். ஆனா ஒரு ஆர்வத்துல தான் கேக்குறேன் சொல்லேன்.”



“ பேய்ன்னு எதுவும் இல்ல.”



“ஆனா பேயப் பார்த்ததா சிலர் சொல்றாங்களே.”



“பொதுவா மக்களுக்கு இருட்டுன்னாலே பயம். பகல்ல நமக்கு நாம பாக்குற எல்லாமே தெரியுது. ஆனா இருட்டுல அவ்வளவ்வா தெரியாதுல்ல.”



“ஆமா..”



“அதான் விஷயம். பகல்ல அவ்வளவு தெளிவா பாக்க முடிஞ்ச ஒன்ன இருட்டுல சரியா பாக்கமுடிலங்ன்குற மனிதனோட அடிமனசு பயம் தான் தேவை இல்லாத கற்பனைக்கு இடம் தருது. அது ஒருவித பயத்துக்கு இடம் தருது. அந்த பயம் தான் பேய்ங்குற இல்லாத ஒன்னு இருக்குறதா நினைக்க வைக்கிது.”



“ஆனா சிலரோட கண்ணுக்கு மட்டும் உருவங்கள் தெரியுதே.”



“அது தீவிர மனஅழுத்தம் உள்ளவங்களுக்கு மட்டும் தான் தோணும். ஏன்னா தீவிரமன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவங்க கண்ணுக்கு சில உருவங்கள் தோணும். அதே போல அவங்களுக்கு மட்டும் சில குரல்கள் கேக்கும். நீ சுஜாதாவோட “ஆ” கதை படிச்சிருந்தேன்னா புரியும். அந்த கதையோட நாயகனுக்கும் இதே போல பிரச்சனைகள் இருக்கும். தனுஷோட “3” படத்துல கூட அவனுக்கு மனஅழுத்த பாதிப்பால் சில உருவங்கள் தோணும். இத ஆங்கிலத்துல “AUDITORY HALLUCINATIONS” அப்படின்னு சொல்றாங்க. இப்படிப்பட்டவங்க பாக்க வேண்டியது பூசாரிய இல்ல. நல்ல டாக்டர.”



“நீ சொல்லி தான் இதெல்லாம் தெரியுது.”



“ நிறையபடி உனக்கும் தெரியவரும்.”



“ஆவ்.. எனக்குலாம் புக்க திறந்தா தான் தூக்கம் தான் வரும்.”



“ம்ம்ம்.. குமார் எனக்கு ஒரு யோசனை இந்த விசயத்த நாம ஏன் நேரடியா அணுக கூடாது. உண்மைல அங்க என்ன நடக்குதுன்னு நேரடியா போய் பார்த்து உண்மை என்னன்னு கண்டுபிடிப்போம்.”



“நல்ல யோசனைடா விக்கி.”



மறுநாள் அவர்கள் இருவரும் அந்த ஊருக்குச் சென்று ஊராரிடம் விசாரித்தரிந்து, தாங்கள் பத்திரிகையில் இருந்து வருவதாகவும் இன்று இரவில் சுடுகாட்டில் தங்கியிருந்து உண்மையை அறியப்போவதாகவும் சொல்ல, எல்லோரும் அவர்களை முடிந்த அளவு தடுத்துப் பார்த்தார்கள். உண்மையை ஆராய்வது எங்கள் கடமை என்று சொல்லிக் கிளம்பினார்கள். கிளம்பும் முன் பேயைப் பார்த்ததாகச் சொன்ன முருகனைப் பேட்டி காண சென்றார்கள். அவன் அரண்டுபோய்க் கிடந்தான். கண்ணில் இன்னும் பயம் மிச்சம் இருந்தது. அவனிடமும் இன்று சுடுகாட்டில் தங்கப்போவதாக சொல்ல, அவன் பயந்தபடியே வேண்டாம் என்று சொன்னான். அவர்கள் எல்லாவற்றையும் வீடியோவாக பதிவு செய்து கொண்டார்கள்.



அன்று இரவு...



“கீரிச்..” என கையில் டார்ச்லைட் சகிதம் சுடுகாட்டின் கதவைத் திறந்தான் விக்கி கூடவே குமாரும். வீடியோ Onல் ஓடிக்கொண்டிருக்க. சுடுகாட்டின் சுற்றுப்புறமெங்கும் அமைதியாய் இருட்டடித்துக் கிடக்க. டார்ச்சின் வெளிச்சத்தை சுற்றுப்புறமெங்கும் ஓட விட்டு வீடியோ எடுத்து பதிவு செய்துக் கொண்டார்கள்.



“ஏன்டா விக்கி ஒன்னும் இருக்குற மாதிரி தெரியலையே. பேய் இன்னைக்கு லீவ் எடுத்துடுச்சா என்ன.?”



“ஏன்டா. நேரங்காலம் தெரியாம காமெடி பண்ணிட்டு.” அப்பொழுது தீடிரென,



“க்ரீச்..” சத்தத்தோடு கேட் அறைந்து சாத்திக் கொண்டது. விக்கியும் குமாரும் திடுக்கிட்டார்கள்.



“குமார் வீடியோவ ஆன் பண்ணு சீக்கிரம்.”



இங்கிருந்து தான் என சொல்ல முடியாதபடி எங்கிருந்தோ காற்றில் புகை கிளம்பியது. எங்கிருந்தோ நாயின் ஊளை விட்டு விட்டுக் கேட்டது.



“ஹா... ஹா..ஹா..” என சிரிப்புச் சத்தம் கேட்க ஆரம்பித்தது.



காற்றில் “ர்ர்ர்ர்ர்...” சத்தம் கேட்க ஆரம்பிக்க,

அது “வா...” என அவர்களை நோக்கிக் கையை நீட்டியபடியே பறந்து வந்தது.







விக்கி சிந்தனையோடு அந்த வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த குமார்.



“டேய் இன்னும் எத்தனை தடவை தான் அந்த வீடியோவ திருப்பித் திருப்பி போட்டுப் பார்ப்ப.?” புன்னகைத்த விக்கி



“அப்படிப் போட்டுப் பார்த்ததால தான் ஒரு விசயத்த நான் கண்டுபிடிச்சேன்.”



“என்ன அது.?”



“நம்மள நோக்கி பறந்து வந்தது பேய் இல்ல.”



“என்னடா சொல்ற.?”



“எஸ்.. இந்த வீடியோவ ஒரு நிமிஷம் பாரு.” விக்கியும் குமாரும் தங்களை நோக்கிப் பறந்து வரும் பகுதியைப் பார்த்தனர்.



“இதுல என்ன.?”



“அந்த சத்தத்தைக் கொஞ்சம் கேளேன்.” என்றபடி சத்தத்தைக் கூட்டி வைத்தான் விக்கி.



திரையில் அது அவர்களை நோக்கி வந்து கொண்டிருக்க “ர்ர்ர்ர்ர்....” என்று சத்தம் கேட்டது.



“இந்த சத்தத்துல என்ன இருக்கு.?”



“இந்த சத்தத்துல தான் விசயமே இருக்கு.”



“என்ன விஷயம்.?”



“இது பேய் இல்ல. பேய் போல உருவாக்கப்பட்ட ட்ரோன் (Drone).”



“What.?”



“Yes.. பறக்கும் ட்ரோன்ல பொம்மைய மாட்டி அதைப் பறக்க வச்சி அதைப் பேய்ன்னு நம்ப வச்சிருக்காங்க.”



“My God.. எதுக்காக.?”



“அது எனக்கு தெரியல. இன்னொரு விசயமும் இருக்கு இதை யார் செஞ்சதுன்னு சொன்னா ஆச்சரியப்படுவ.”



“யாரு.?”



“இந்த வீடியோ பாரு.”



“அடப்பாவி, இவனா.?!”



மறுநாள்..



காவல்துறையின் அந்த ஜீப் புழுதியை வாரி இறைத்தபடி அந்த வீட்டினுள் நுழைந்து அவனை வெளியே இழுத்து வந்தது. அவன்.?



நாம் கதையில் ஆரம்பத்தில் சந்தித்த முருகனே தான்.



மறுநாள் செய்தியில்..



“இணையத்தில் சமீபகாலமாக பொதுமக்களைப் பயமுறுத்தி செய்யும் பிராங்க் (PRANK) வகை வீடியோகள்அதிகரித்துள்ளன. அதேபோல பொதுமக்களை பயமுறுத்தி வீடியோ எடுக்க நினைத்து முருகன் என்பவரும் அவர்களது நண்பர்கள் சிலரும் பிடிபட்டுள்ளனர். சுடுகாட்டில் அங்கங்கே ஒலிப்பதிவுகளைப் பொருத்தி பறக்கும் ட்ரோன் ஒன்றில் பேய் போன்ற பொம்மையை மாட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வீடியோ எடுத்து மாட்டியுள்ளனர். இதைத் துணிச்சலாக சுடுகாட்டில் தங்கி கண்டுபிடித்த பத்திரிகையாளர்கள் விக்கி மற்றும் குமார்.....

எழுதியவர் : அருள் ஜெ (24-Feb-21, 7:17 am)
சேர்த்தது : அருள் ஜெ
பார்வை : 192

மேலே