மனிதாபிமானம்

சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக வேலை பார்த்து கொண்டிருந்த ரமேஷிற்கு குஜராத்தில் காந்திநகரில் ஒரு கல்லூரியில் படிப்பிற்கு ஏற்றால் போல விளையாட்டு துறை இயக்குனராக வேலை கிடைத்ததும் சென்னையில் இருந்து புறப்பட்டு வந்தடையும் முன்பே கல்லூரி நிர்வாகத்தின் உதவியோடு பார்த்து வைக்க பட்டிருந்த வீடு இருக்கும்  அந்த அடுக்குமாடி கட்டிடத்தின்  பேஸ்மென்ட்டில் லிப்ட் முன்பாக நின்று கொண்டு டெம்போவில் இருந்து இறக்கிவைத்த பொருள்களை சரிபார்த்துவிட்டு ஒவ்வொன்றாக லிப்ட் வழியாக பதினஞ்சாவது மாடியில் இருக்கும் தனது வீட்டுக்கு அனுப்பிக்கொண்டிருந்தான் வேலை ஆட்கள் மூலமாக.

        சற்று நேரத்தில், அழகாக சேலை அணிந்து, உஷா உதுப் போல அருமையாக பொட்டு  வைத்து அங்கு வந்த முப்பது ஐந்து வயது மதிக்க தக்க பெண் தன்னை அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் அஸோஸியேஷன் செயலாளர் என அறிமுகம் செய்து கொண்டாள் குஜராத்தியில்...ரமேஷ் LNIPயில் (லட்சுமிபாய்  நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பிஸிக்கல் எடுகேஷன்)  படிக்கும் போது இந்தி நன்றாக கற்றுக்கொண்டான்.

       அந்த பெண் சொல்லுவதை புரிந்து கொண்ட ரமேஷ் ஒ.... அப்படியா.... தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி... தனக்கு குஜராத்தி தெரியாது, ஆங்கிலமும் இந்தியும் தெரியும் என்று ஆங்கிலத்தில் கூறினான்.... உனக்கு எந்தெந்த மொழிகள் தெரிந்தால் எனக்கென்ன என்பது போல... ஒ சப் டீக் ஹை.... அதெல்லாம் சரி... இந்த பெரிய பெரிய பொருள்களையெல்லாம் லிப்ட்டில் எடுத்து ச்செல்லக்கூடாது படிக்கட்டு வழியாகத்தான் எடுத்து செல்ல வேண்டும் இது மக்கள் செல்வதற்காக மட்டும் பயன் படுத்தப்படுவது என்றாள் கறாராக... ரமேஷ் கொஞ்சம் ஜாலி டைப் இரவு நேரம் என்பதால் ஏற்கனவே ரெண்டு பெக் சிவாஸ் ரேகள் ஏற்றியிருந்தான்.....

       அந்த பெண்ணின் அதிகார தோரணை நிறைந்த அந்த வார்த்தைகளை கேட்டு ரமேஷிற்கு....என்ன இந்த செயலாளர் பெண் இப்படி சொல்லுகிறார்... பீரோ பிரிட்ஜ் கட்டில் என பெரிய பொருள்களை எப்படி  படிக்கட்டின் வழியாக பதினைந்தாவது மாடி வரை எடுத்து செல்ல முடியும்....இங்கே வேலைக்கு வந்திருக்கும் வேலைகாரர்களும் மனிதர்கள் தானே....இப்படி பேசும் மனிதர்களுக்கு மனசாட்சி என்று ஓன்று இருக்கிறதா?.....

       வீட்டை விட்டு வெளியே வரும் போது நகைகளையும் நல்ல உடைகளையும்  அணிந்து வரும் சில ஆணோ அல்லது பெண்ணோ மனிதாபிமானத்தை மட்டும் கழட்டி வைத்துவிட்டு வருகிறார்களா?... அல்லது  மெத்த படிக்க நேரம் கிடைத்தவர்களுக்கு மனிதாபிமானத்தை பற்றி  படிக்க நேரம் கிடைக்கவில்லையா?... எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என இவர்களுக்கு தெரியவில்லையே என தோன்றியது...   எஸ்.... ஆல் தட் க்ளிட்டர் இஸ் நாட் கோல்ட் என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான்...

       இதை கேட்ட அந்த பெண் ஏ மிஸ்டர் கம் எகைன்.... கம் எகைன் என்றாள்... ஒன்றுமில்லை மேடம் தங்களுக்கு  முகத்தில் இருக்கும் அழகு அகத்தில் இல்லையே என்று சொன்னேன்.... இதை கேட்ட அந்த பெண் அனாவசியமான வார்த்தைகளை பேச வேண்டாம் இந்த அடுக்கு மாடி குடியிருப்புக்கென்றே சில கட்டுப்பாடுகளும் விதி முறைகளும் இருக்கின்றது அதை இங்கே குடியிருப்பவர்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் இது அஸோஸியேஷனின் கட்டளை என்றாள் கண்களை பெரிதாக வைத்துக்கொண்டு........

      அப்போது அவளை பார்க்கும்போது கல்கத்தா மஹாகாளி கோவிலின் காளியம்மன் ஞாபகம் வந்தது நாக்கு மட்டும் தான் வெளியே வரவில்லை என்று தோன்றியது ரமேஷிற்கு.

         அப்பெண் அக்கட்டளையை பிறப்பிக்கும் போது அப்பெண்ணுடன் நின்று கொண்டிருந்த அடுக்கு மாடி குடியிருப்பு வாசிகள் குடியுரிமை பறிக்கப்பட்டு ஏதோ ஒரு நாட்டின் அகதிகள் முகாம்களில்  தங்கியிருப்பவர்கள் போல ஏகோபித்த குரலில் ஆமாம், ஆமாம் செயலாளர் மேடம் சொல்லுவது தான் சரி என்றனர்.

        ரமேஷிற்கு சிரிப்பு வந்தது, அடக்கிக்கொண்டு சரி அப்படியே செய்கிறேன் தயவுசெய்து கொஞ்சம் வழி விடுங்கள் எனது ஆட்களை பொருள்களை எடுத்து செல்ல விடுங்கள் என்று கேட்டுக்கொண்டு அவர்கள் சென்றதும் நீ என்ன சொல்லுவது நான் என்ன கேட்பது மனிதனின் கஷ்டங்களை விட லிப்ட்டின் கஷ்டங்கள் பெரிதாக படுகிறதா இவர்களுக்கு?..,

       எழுத படாத சட்டங்களை வைத்திக்கொண்டு ஏகாதிபத்திய வேலைகளை செய்கிறார்கள், இவர்கள் இங்கே என்ன அரசாங்கத்தால் அங்கீகரிக்க பட்டவர்களா?..அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் சில அஸோஸியேஷன் தலைவர்களும், செயலாளர்களும் தங்களை ஒரு வார்டன் போலவும் குடியிருப்பவர்களை ஒரு விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் போலவும் நடத்துகிறார்கள் என்று எண்ணிய ரமேஷ்..... லிப்ட்டின் வழியாக பொருள்களை எடுத்து செல்லுங்கள் பிரச்சனைகளை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றான்.

       விவரம் அறிந்து அடுத்த நாள் ஞாயிற்று கிழமை அஸோஸியேஷன் கூட்டம் கூட்டப்பட்டது ரமேஷிர்க்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது... அழைப்பை பார்த்துவிட்டு டஸ்ட் பின்னில் தூக்கிபோட்டுவிட்டு போரோஸில் கிளாசை எடுத்து ஏழு எட்டு ஐஸ் கட்டி துண்டுகளை போட்டு சிவாஸ் ரேகளை எடுத்து ஒரு பெக் லார்ஜை ஐஸ் கட்டிகளின் மேலே ஊத்தி ஆன் தி ராக் செய்து.....

       ஒரு பச்சிளம் குழந்தையை கையிலே எடுத்து எப்படி மெதுவாக ஆசையுடன் முத்தம் கொடுப்போமோ அப்படி தன் உதடுகளை போரோசிலினின் விளிம்பில் வைத்து ஒரு உறிஞ்சு உறிஞ்சியதும் காதலியுடன் முதன் முதலில் உதடுகளுடன் உதடு சேர்த்து கொடுக்கும் முத்தத்தின் ஆனந்தத்தை அடைந்தான் ரமேஷ்.... ஒரு பக்கம் SPBயின்  "உன்னக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்த லாலா... உனதாணை பாடுகின்றேன் நான் ரெம்ப நாளா" என டிவியில் பாடல் ஓடிக்கொண்டிருந்தது.

       கைபேசியில் அம்மாவின் அழைப்பு.... நலம் விசாரித்து விட்டு.... மூன்று  தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டாய், இனி என்ன, உனது எதிர்காலத்தை பார்க்க வேண்டாமா?.., முதலில் இருந்த வேலையை விட இப்போது  நல்ல வேலையாகவே கிடைத்துவிட்டது அப்புறம் என்ன, திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதானே?....... பெண் பார்க்கட்டுமா என்றாள் அம்மா...கொஞ்சம் பொருங்கம்மா ஒன்னும் அவசரமில்லை என அழைப்பை துண்டித்தான்..... ரமேஷ்

       அம்மா இப்படித்தான் ரெண்டு நாளைக்கு ஒரு முறை கல்யாண பேச்சை எடுப்பார்கள்.. அவர்களும் பாவம் என்ன செய்வார்கள்... நமக்கே முப்பத்தி எட்டு வயசாகிவிட்டது... அவர்களோ நம்மை விட வயசானவர்கள்... மகனின் கல்யாணத்தை பார்க்க ஆசை இருக்கத்தானே செய்யும் என்று ரமேஷ்  நினைத்து க்கொண்டிருக்கும் போதே காலிங் பெல் சத்தம் கேட்டு ...கதவை திறந்து பார்த்தால் ஒரு வாலிப வயதுடைய நபர்  அஸோஸியேஷம் கூட்டத்திற்கு அழைத்து வர சொன்னார்கள் செயலாளர் மேடம் என்றான்.... 

       நான் ட்ரிங்ஸ் செய்துள்ளேன் இப்போது வந்தால் அவர்களுக்கு நல்லதல்ல... என்ன முடிவு எடுக்கிரார்களோ எனக்கு தெரிவித்தால் போதும் என்று சொல்..... என க்கூறிவிட்டு, கதவை அடைத்து உள்ளே வந்த ரமேஷ்.... ஹ்ம்...... ஏய்... பெரிய பொட்டுக்காரி வசந்த சேனை, வட்டமிடும் கழுகே... என்னை  மனோகரா சிவாஜி ரேஞ்சுக்கு பில்டப்பை கொடுத்து அழைத்து வரசொன்னாயா... மனிதாபிமானம் இல்லாத மனிதர்கள் அழைத்து .... நான் சென்றால் அது என் தன்மானத்திற்கே இழுக்கு.... இருப்பவனுக்கு ஒரு வீடு........இல்லாதவனுக்கு ஆயிரம் வீடு... நீ என்ன முடிவு வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள் கூட்டத்தில்,  அதை பற்றி கவலை படும் மனிதன் நான் அல்ல என்று புலம்பிக்கொண்டே மீண்டும் ஒரு லார்ஜ் ஆன் தி ராகில் மலையேறினான்

        அடுத்த நாள் காலை கல்லூரிக்கு புறப்படும்போது கேட்டு வாசலில் இருந்த காவலக்காரன் கடிதம் ஒன்றை கொடுத்தான்... பிரித்து பார்த்தான்... விதிகளை மீறியதற்காக ரூபாய் ஐநூறு அபராதம் விதிக்கபட்டிருந்தது.... காவல் ஆளிடம் ரூபாய் ஐநூறுடன் ஐம்பது அதிகம் கொடுத்து ... ஐநூறு அபாரதத்திற்கு கட்டிவிட்டு ரசீது வாங்கி வை... ஐம்பது... நீ  வைத்துக்கொள் என்றதும் அவன் சிரிக்க.... அவனுக்கும் சிரிக்க தெரியும் என்பது அப்போது தான் ரமேஷுக்கு தெரிந்தது...

        சரி இந்த கடிதம் கொடுத்தது யார் என்றான் ரமேஷ்.... சார் செக்கரட்டரி அம்மா தான் கொடுத்தாங்க.... ஒ... அப்படியா... அவங்க பேரு என்ன.. எந்த ஊர்க்காரங்க... கொஞ்சம் விவரமா சொல்ல முடியுமா என்றதும் சொல்ல துவங்கினான் காவலாளி.... சார் அந்த அம்மா பேரு ஷிவானி... பதினாலாவது மாடியில இருக்காங்க, நீங்க பதினஞ்சில இருக்கேங்கள்ல சார்.... கேட்டுக்கொண்டே தொடர்ந்தான்... இன்னும் கல்யாணம் ஆகவில்லை... ஏதோ ஒரு கம்பெனியில வேலை பார்க்கிறாங்க... அப்பா அம்மா, கூட பிறந்தவங்க, என்று  யாருமில்லை இன்னைக்கோ நாளைக்கோ அப்படிங்கிற மாதிரி ஒரு வயசான பாட்டி மட்டும் இருக்கங்கா... குஜராத்து க்காரங்கதான் சார் என்றான்..

       ஒ..... கல்யாணம் ஆகவில்லையா.... அதான பார்த்தேன் வண்டியோட மயிலேஜ் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கேன்னு.... அபராதம் போட்டவளேயே... அவதான் தாரம் என்று ஆக்கிவிட்டால் என்று எண்ணினான் ரமேஷ்...

       அங்கு நடந்த அனைத்து நடவடிக்கைகளும் வீட்டுக்கு சொந்தக்காரருக்கும்
தெரிவிக்கப்பட்டது, கை பேசியில் அழைத்து பேசினார்... கவலை படவேண்டாம் சார் நான் சம்மாளித்து க்கொள்வேன் என்று அவருக்கு சமாதானம் சொன்னான், அந்த பிரச்சனைகளுக்கு அப்புறம் அங்கிருக்கக்கூடிய குடித்தனக்காரர்கள் அனைவரும் ரமேஷை ஒரு எதிரி போலவே பார்த்தனர்...

       ரமேஷ் அது பற்றி கவலைப்படும் மனிதன் அல்ல எவன் ஒருவன் மனிதாபி மானமும் நேர்மையும் கொண்டிருக்கிறானோ அவன் இப்படி பட்ட குறுகிய மனம் கொண்ட மனிதர்களை பற்றி கவலை படுவதில்லை இது ரமேஷின் கொள்கையும் கூட...

       நாட்கள் ஓடியது... வழக்கமான... ஆன் தி ராக்.... SPB பாடல்கள் கேண்டீன் சாப்பாடு.... அம்மாவின் கைபேசி அழைப்பு  கல்யாணத்தை பற்றிய பேச்சு..... இப்படியே ஓடி க்கொண்டிருந்த போது ஒருநாள் இரவு குஜராத்தில் அடிக்கடி ஏற்படும் நில நடுக்கம் அன்றும் ஏற்பட்டது.

          அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து மக்கள் அலறி அடித்துக்கொண்டு கீழே ஓடினர்...லிப்ட்ல போகாதீங்க... லிப்ட்ல போகாதீங்க..... உள்ள மாட்டிக்கிடுவீங்க என்று யாரோ கத்துவது கேட்டது, ரமேஷும்  கைபேசியை எடுத்து கொண்டு கீழா ஓடினான் ...

         பதினாலாவது மாடியை  கடக்கும்போது... ஷிவானி கீழே செல்லும் மக்களிடம்.... கை கூப்பி.... அழுது.... கெஞ்சி கொண்டிருந்தாள்...... என் பாட்டியை காப்பாத்துங்க..... பாட்டியை காப்பாத்துங்கள் என்று.....இதை கேட்ட ரமேஷ் மின்னல் வேகத்தில் ஷிவானியை தள்ளிவிட்டு வீட்டுக்குள் புகுந்து கட்டிலில் படுத்திருந்த பாட்டியை அலாக்காக தூக்கி தோளில் போட்டுக்கொண்டு .... ச்சலோ ச்சலோ......பாகோ பாகோ..... என்று கத்திக்கொண்டு.... வா ஷிவானி சீக்கிரம்...வா .... என்று ஷிவானியின் கைகளை பற்றி கொண்டு...  கீழே ஓட துவங்கினான்...  இருபது நொடிகளில் அந்த நடுக்கம் நின்றது...

        பத்து நிமிடங்களில் அங்கு குடியிருந்த மக்கள் அனைவரும் வெட்ட வெளி மைதானத்திற்கு வந்தடைந்தனர்... ஆண்டவனின் புண்ணியத்தால் நில நடுக்கம் பெரிதாக ஏற்படவில்லை... அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்... மக்கள் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து க்கொண்டனர், அவர் அவர் கடவுளுக்கு நன்றி தெரிவித்து க்கொண்டனர்...

      ஷிவானி ரமேஷை  பார்த்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தாள்.... ஷிவானி அனைவரிடமும் கைகூப்பி அழுது பாட்டியை காப்பாத்துங்கள் என்று வேண்டினாள், யாருமே உதவ வில்லை அவள் ஒன்றும் ரமேஷை பார்த்து..... கேட்கவுமில்லை, கைகூப்பவும் இல்லை,

        ஆரம்பம் முதலே அவர்களின் பிரச்சனையை மனதில் வைத்து கொண்டு ஒரு வேளை அவன் பாட்டியை காப்பாத்த மாட்டான் என நினைத்திருக்கலாம்....ஆனால் ரமேஷ் கைகூப்பி அழுது கெஞ்சினால்தான் உதவி செய்வேன் என்று நினைத்திருந்தால் அது பழிவாங்கும் எண்ணமாகும், பழிவாங்க அது தகுந்த இடமும் அல்ல.

       அவளை பழிவாங்குவதாக நினைத்து பாட்டி பலிகடா ஆக்கப்படுவார்கள் அதே போல கெஞ்சி கூத்தாடிய பின் தான் பாட்டியை காப்பாத்த வேண்டும் என்றாள் அது உதவியோ மனிதாபி
மானோ அல்ல அதன் பெயர் வியாபாரம்....ரமேஷ் ஒரு பழிவாங்கும் மனிதனும் அல்ல சூழ்நிலையை பயன் படுத்தி சம்பாரிக்கும் வியாபாரியும் அல்ல...எதிர் பார்ப்புடன்தான் கியூபாவிற்கு உதவி செய்வேன் என்று இருந்திருந்தால் இன்றைக்கு சே குவேரா என்ற மாமனிதனை இந்த உலகிற்கு தெரியாமலே போயிருக்கலாம்

        இங்கே ரமேஷ் ஒரு மனிதன், நல்ல மனிதன், எதையும் எதிர் பார்க்காமல் உதவி செய்யும், மனிதாபிமானம் கொண்ட நல்ல மனிதன் நன்றி சொன்ன ஷிவானியை பார்த்து எதர்க்கு நன்றி என்ற பெரிய வார்த்தைகள் எல்லாம்...  என்று கூறிவிட்டு எங்கோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான், என்ன நீங்களே சிரித்து கொண்டிருக்கிறீர்கள் சொன்னால் நானும் சிரிப்பேன் அல்லவா என்றாள்....

         இல்ல உங்க அப்பார்ட்மெண்ட் தத்துவத்ததையும் அதற்க்கு ஆதரவாக பேசிய  மக்களையும் நினைத்தேன் சிரித்தேன் என்றான்..... என்ன தத்துவம்  புரியலையே.... இல்ல நீங்க சொன்னேங்க லிப்ட் மக்கள் உபயோகிக்க மட்டும் தான், பொருள் ஏற்றி செல்வதற்கல்ல என்றீர்கள், அதற்க்கு உங்ககூட சேர்ந்து எல்லோரும் ஆமாம் சாமி போட்டாங்க....

        ஆனால் இன்று  மக்களுக்காக வைக்க பட்ட லிப்ட்  எந்த மக்களுக்கும் உதவவில்லை, ஆமாம் சாமி போட்ட மக்களும் நீங்க காப்பாத்துங்க என்று கத்தும் போதும் யாரும் உதவி பண்ணவில்லை, இது தான் நிஜ வாழ்க்கை, இந்த உலகத்தில எல்லா பொருள்களையும் நாம உபயோக படுத்தலாம் ஆனா எப்போ, எதுக்கு, எந்த சூழ்நிலையில், பயன் படுத்துறோம் என்பதுதான் முக்கியம் என்று சொன்ன ரமேஷை ஆச்சரியமாக பார்த்தாள் ஷிவானி.... அங்கு சற்று நேரம் அமைதி நிலவியது.....

          அந்த அமைதியை கலைப்பவனாக...... நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணவில்லை என்று கேட்ட ரமேஷை பார்த்து..... ஒரு வேளை உங்களை போல நல்ல மனிதர்களை கணவராக அடையவே கடவுள் என்னை இவ்வவளவு காலம் காக்க வைத்திருக்கலாம் என்று வெக்கத்தோடு கூறினாள் ஷிவானி.... ரமேஷுக்கு கேட்கவா வேண்டும்... ஏ நில நடுக்கமே மிக்க நன்றி உனக்கு என கத்த வேண்டும் போல இருந்தது... நீங்க ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டாள் 

       நான் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று உங்களுக்கு யார் சொன்னது என்றான், நான் இந்த குடியிருப்பின் செகரட்டரி அனைவரின் பயோ டாட்டாவும் என் கையில் என்று சொல்லிவிட்டு இவனுக்கு நம்ம சொன்னது ஒரு வேளை  புரியேலையோ என யோசிக்க துவங்கினாள்..

      அது ஒன்னும்மில்ல மேடம் நான் ஒருபெண்ணை காதலிக்கிறேன் அந்த பெண்ணிடம் இனிமேல்தான் சொல்ல வேண்டும் என்றதும்.... ஒ அப்படியா என்று சொல்லிவிட்டு ஷிவானியின் மனது ச்சே... அவசர பட்டு உளறிவிட்டோமோ என்று நினைத்தது..

       அம்மாவின் அழைப்பு வந்தது.... என்னாடா ரமேஷ்.... உனக்கு ஒண்ணுமில்லயே காந்திநகர்ல நிலநடுக்கம் வந்துட்டாமே செய்தியில் பார்த்தேன்.... அதெல்லாம் ஒன்னும் இல்லை... அப்புறம் ஒரு நல்ல செய்தி...... இங்கயே ஒரு பொண்ணு பார்த்துவிட்டேன்...ஷிவானியிடம் அம்மா என்று சைகை காட்டி விட்டு.... .

        முதல் முறையாக ரமேஷ் அம்மாவிடம் தன் கல்யாணத்தை பற்றி அவனே பேசினான்.... சந்தோசம்பா..... பொண்ணு பேரு என்ன என்று கேட்ட அம்மாவிடம்.... ஷிவானி என்று சொல்லிவிட்டு  ஒரு கையில் போனும் மற்றொரு கையில் அவளையும் அணைத்து க்கொண்டான்....... எஸ் சம் டைம் ஆல் தட்  க்ளிட்டர்ஸ் இஸ் கோல்ட் என்றான்.... ஷிவானியின் முகம் வெக்கத்தில் மின்னிக்கொண்டிருந்தது  🙏🙏🙏

எழுதியவர் : மேஜர் முருகன் (6-Jun-21, 7:17 am)
சேர்த்தது : Major Murugan
பார்வை : 109

மேலே