இதய ஆசிரியருக்கான தாயுமாணவியின் அர்ப்பணிப்பு

ஏதும் அறியா!
நடப்பது ஒன்றும் புரியா!
செய்வது என்னவென்று
தெரியா!

விழிநீர் வழிய,
தங்களை தேடிய,
இரு விழிகளுக்கும்,
துன்பங்கள் மட்டுமே
நிறைந்த இதயத்திற்கும்,

எத்தனை அன்பு;
எத்தனை அரவணைப்பு;
எத்தனை அறிவுரை;
எத்தனை ஆலோசனை;

முட்களுக்கிடையில்
சிக்கித் தவித்த
ரோஜாவை,
தனது மூச்சுக்காற்றினால்
உயிர் பெறச்செய்த
தாயும் நீயே..!

உன் பிள்ளைகளைக் கூட
இவ்வாறு கவனிப்பாயா?
என்று சந்தேகமும்
எழுந்ததுண்டு...!

உன்னில் வாழ்ந்த
உன்னால் சுவாசித்த
நாட்கள் சில;
ஆனால், இன்றும் கூட
என்னில் ஏற்படும்
ஏக்கம் பல...!

சிறு தவறு செய்தாலும்
அன்பால் அறிவுறுத்தி
அனைத்தையும்ம் கற்றுத்தந்த
கலைமகளும் நீயே...!

ஒருநாள் நீ வரவில்லை
என்றாலும்,
காலைப் பனித்துளியும்
காரணம் கேட்கத்தான்
செய்கிறது!
யாரைத்தேடி அலைந்து
சோர்கிறாய் என்று...!

அனைத்தையும் தந்து
ஆசிரியராக மட்டுமின்றி!
எனக்கென்று
யாரும் இல்லா சூழலில்,

நம்பிக்கையான
ஓர் நல் - பந்தமாய்
நானிருக்கிறேன்!
என்று சொல்லி,

அறிவில் சிறந்த
அன்னையாய் இருந்த
இதயத்திடம் வேண்டுவது,
என்னவென்றால் - நான்
வாழும் வரையின்றி
வீழும் வரை என்னை
தங்களது மாணவியாய்
ஏற்பீர்களா?

குருவின் அறிவை
முழுவதுமாக பெறத்துடிக்கும்
சிஷ்யையின் வேண்டுகோளும்
இதுவே...!

அப்பொற்காலத்தை
நினைக்கும் பொழுதெல்லாம்
வார்த்தைகள் பல இருந்தும்
கண்ணீர் மட்டுமே
மொழியாவது ஏனோ?

உமது கைகளால் செதுக்கப்பட்டு
என்றும் உமது
நினைவுகளை சுமக்கும்
தாயுமாவியும்
இவளே...!

நன்றி கடனை
அடைக்க இயலா
கரத்தினைக் கொண்டு
எழுதப்பட்ட இதயத்தின்
அன்பின் வெளிப்பாடும்
இதுவே...!



✍️ சௌமியா தட்சணாமூர்த்தி.

எழுதியவர் : சௌமியா தட்சணாமூர்த்தி (19-Jul-21, 7:59 pm)
பார்வை : 7777

மேலே