மாசில்சீர்ப் பெண்ணினுட் கற்புடையாட் பெற்றான் - திரிகடுகம் 16
நேரிசை வெண்பா
மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்
பெண்ணினுட் கற்புடையாட் பெற்றானும் - உண்ணுநீர்
கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர்
சாவா உடம்பெய்தி னார். 16
- திரிகடுகம்
பொருளுரை:
மண்ணுலகத்தில் வானளாவிய பெரிய புகழை நிலைநிறுத்தினவனும்,
பெண்களுள் குற்றமற்ற சிறப்புடைய கற்புடையவளை மனைவியாகப் பெற்ற கணவனும்,
உண்ணப்படுகின்ற நீர் குறைவுபடாதபடி கிணறுகளைத் தோண்டி வைத்தவனும் ஆகிய இம் மூவரும் எக்காலத்தும் இறவாத புகழுடம்பைப் பெற்றவராவார்.
கருத்துரை:
உலகத்தில் ‘ஈதல் இசைபட வாழ்தல்' என்ற பொய்யாமொழிக்கிணங்க,
இரப்பவர்க்கு ஈந்து சிறந்த புகழை நாட்டியவனும்,
சிறந்த கற்புடைய மனைவியைப் பெற்றவனும்
நீரறாத கிணறு முதலியவற்றைத் தோண்டி வைத்தவனும் இறந்தும் இறவாத புகழுடம்பைப் பெற்றவராவார்.
கூவல்: கூவம் என்பதன் போலி,
பூதஉடம்பு அழிந்தும், அதனாலாய புகழுடம்பு அழியாதிருத்தலால் சாவா வுடம்பு எனவும், அம் மூவரும் என்றும் உளர்போல விளங்குதலின் உடம்பு எய்தினார் எனவுங் கூறினார்.

