நன்றாற்றி அஞ்சா தமைந்திருக்கற் பாற்று – அறநெறிச்சாரம் 19
நேரிசை வெண்பா
கோட்டுநாள் இட்டுக் குறையுணர்ந்து வாராதால்
மீட்டொரு நாளிடையுந் தாராதால் - வீட்டுதற்கே
வஞ்சஞ்செய் கூற்றம் வருதலால் நன்றாற்றி
அஞ்சா தமைந்திருக்கற் பாற்று 19
– அறநெறிச்சாரம்
பொருளுரை:
விதித்த நாளை விட்டு குறைநாளில் வருவதுமில்லை; விதித்த நாளுக்குமேல் மிகுதியாக ஒருநாள் கூடக் கொடுப்பதும் இல்லை;
வருதலை முன்னர் அறிவியாது வந்து வஞ்சிக்கின்ற எமன் அழிப்பதற்கே வருவதனால் அறத்தினை மிகவும் செய்து மரணத்திற்கு அஞ்சாமல் அடங்கியிருத்தல் வேண்டும்.
குறிப்பு:
கூற்றம் உயிரையும் உடலையும் கூறுபடுப்பது.