எனக்கு தெரியாமல்
எனக்கு தெரியாமல்
அன்று சேலத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தேன். முக்கிய விருந்தாளியே நான் தான். கருத்தரங்கில் அவரவர்கள் தங்களுடைய கருத்துக்களை மேடையில் விளக்கிக் கொண்டிருந்த போது எனக்கு அழைப்பு செல்போனில் வந்தது. எரிச்சலுடன் எடுத்துப் பார்க்க மனைவி. இப்ப மீட்டிங்ல இருக்கேன், பத்து நிமிசம் கழிச்சு நானே கூப்பிடறேன். சொல்லி விட்டு போனை அணைத்தவன் என்னையே பார்த்துக்கொண்டிருந்த அந்த கருதரங்கின் காரியதரிசியிடம் ஒண்ணுமில்லை, வீட்டிலிருந்து போன் சமாளித்தேன். காரியதரிசி நீங்க வேணா பேசிட்டு வாங்க, என்று சொல்லவும் நன்றி சொல்லிவிட்டு மெல்ல மேடையிலிருந்து இறங்கி வாசலை நோக்கி நடந்தேன்.
என்னம்மா என்னத்துக்கு போன் பண்ணியிருக்கே? செல் போனில் அழுகை என்னம்மா? என்னாச்சு ஏன் அழறே ? சச்சு, ராமுவுக்கு, ஒண்ணுமில்லையே ? இரண்டும் எங்கள் வாரிசுகள், அவங்களுக்கு ஒண்ணுமில்லை, மூக்கை உறிஞ்சிய சத்தம், சீக்க்கிரம் சொல்லு, என்ன பிரச்சினை அங்கே ? நம்ம வீட்டுல வச்சிருந்த மூணு பவுன் நகையை காணோம். அப்புறம் வெள்ளி விளக்கு ஒண்ணையும் காணோம்,. பீரோவுல வச்சிருந்த பத்தாயிரம் ரூபாயும் காணோம். ஒப்பித்துக் கொண்டிருந்தாள். மனசு படபடத்தாலும் இங்க பாரு தெளிவா சொல்லு, வேற என்னென்ன காணாம போச்சு, எப்ப போச்சு, இதெல்லாம் உனக்கு எப்படி தெரிஞ்சுது ? காலையில பீரோவ சரியா கவனிக்கலை, இப்ப அரை மணி நேரம் முன்னாடிதான் சச்சுவுக்கு டிரெஸ் எடுக்கறதுக்கு பீரோவை திறக்க போகும்போதுதான் பீரோ திறந்திருந்ததை பார்த்தேன். அப்புறம் நல்லா கவனிச்சு பார்த்ததிலே பீரோவுக்குள்ள வச்சிருந்த மூணு பவுன் செயினும் பணம் பத்தாயிரத்தையும் காணோம். அதுக்குள்ள வச்சிருந்த வெள்ளி விளக்கு ஒண்ணையும் காணோம். வெளியில் எல்லா இடத்தையும் பார்த்துட்டேன். மத்தது எல்லாம் இருக்கு..
சரி சரி. நீ வெளியில எதையும் சொல்லாம இரு. நான் வந்ததுக்கு அப்புறம் பாத்துக்கலாம். இல்லே பக்கத்துல எல்லாம் போலீசுக்கு போலாமுன்னு சொல்றாங்க. நீ என்ன சொன்னே? நான் நீங்க வந்த பின்னால பார்க்கலாம் அப்படீன்னு சொல்லிட்டேன். சரி இன்னைக்கு இராத்திரி கிளம்பி நாளைக்கு அங்க வந்திடுவேன். அப்புறம் பார்க்கலாம். போனை அணைத்தவன் கருத்தரங்கு நடக்கும் அரங்குக்குள் நுழைந்து மேடைக்கு போகாமல் கீழே இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொண்டேன். மனசு மட்டும் வீட்டில் இருந்தது.
அக்கம் பக்கம் ஒரே விசாரிப்புக்கள், போலீஸ் கம்பிளெயிண்ட் பண்ணுங்க சார், என்ற அறிவுரைகள், உங்க வீட்டு வேலைக்காரி மேலதான் எனக்கு சந்தேகம். பல அறிவுரைகள், அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டேன்.
எப்படி கண்டு பிடிப்பது யோசனையில் ஆழ்ந்தேன். ஒரு வாரம் அமைதியாக ஓடியிருந்தது. மனைவியுடன் கடை வீதிக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். வழியில் எதிர்ப்புறம் ஒரு இளஞ் ஜோடி நடந்து வந்து கொண்டிருந்தது.. என் மனைவியை கண்டவுடன் அந்த பெண் கைகளை பிடித்துக் கொண்டு அக்கா எப்படி இருக்கறீங்க ? என்று வினவ நான் நல்லாயிருக்கேன் நீ எப்படி இருக்கே? சரி நேரமிருக்கும் போது வீட்டுக்கு வா சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
ஏம்மா அந்த பெண் பேசறதுக்குள்ள அப்படி என்ன அவசரம்? நின்னு பேசிட்டுதான் வர்றது ? கேட்ட என்னிடம் பசங்க வீட்டுல தனியா இருப்பாங்க, சீக்கிரம் போகணும், என்று சொன்னது எனக்கு செயற்கையாகப் பட்டது. ஏன் தினமும் வீட்டுல தனியாகத்தான் இருப்பாங்க, இன்னைக்கு மட்டும் ஏன் உனக்கு அக்கறை ? சரி சரி சீக்கிரமா வாங்க, மேற்கொண்டு பேசாமல் மெளனமாக வந்ததால் நான் மேலும் பேச முடியாமல் போயிற்று.
வேலைக்காரி பொன்னம்மாள் ஏதோ இரகசியமாய் என் மனைவியிடம் வந்து சொல்ல அவளும் நாளைக்கு காலையில் வரச் சொல், சொல்வது எனக்கு கேட்டது. என்ன விசயம் என்று மனசு கேட்க விரும்பினாலும், அவளாக சொல்லட்டும், என்று விட்டு விட்டேன். இரவு படுக்க வருவதற்கு கொஞ்சம் நேரமானது. அப்படி என்ன அடுக்களையில் வேலை. எல்லாரும் சாப்பிட்ட பின் கேட்டவனிடம் கொஞ்சம் லட்டும், பர்பியும் செஞ்சேன். பசங்களுக்கு ஆகட்டுமேன்னு. எனக்கு ஆச்சர்யம், பரவாயில்லையே, எடுத்துட்டு வா சாப்பிட்டு பார்க்கலாம். காலையில டிபனுக்கு வைக்கிறேன், இப்ப படுங்க என் வாயை அடைத்து விட்டாள்.
காலையில் வேலைக்கு நானும், பள்ளிக்கு என் குழந்தைகளும் கிளம்பி விட்டோம். பாதி தூரம் போன பின்னால்தான் ஞாபகம் வந்தது. காலையில் பலகாரம் வைப்பதாக சொனாளே, ஆனால் கண்ணில் கூட காட்டவில்லை. கோபம் வந்தது,. வர வர இந்த வீட்டுல என்ன செய்யறாண்னே தெரிய மாட்டேங்குது. சாயங்காலம் போன உடனே கேட்கணும் முடிவு செய்து கொண்டேன். மாலை வீட்டுக்கு வந்தவனுக்கு தட்டில் ரெடியாக பலகாரங்கள் வைக்கப்பட்டு போய் கை கால் கழுவிட்டு வாங்க, பசங்க இப்பத்தான் சாப்பிட்டு போனாங்க, ஏன் காலையில மறந்தாய் சண்டை போடலாம் என்று கேட்க வந்தவன் தட்டில் பலகாரங்களை பார்த்த உடன் கை கால் கழுவ பின்புறம் சென்றேன்.
இரவு சாப்பிட்டு முடித்தவுடன் வீட்டு முன் சிறிய நடை உலா வந்தவனை எதிர் வீட்டு ராமையாவின் குரல் இழுத்தது. என்ன ஓய் ? காலையில் உம்ம வேலக்காரியோட பொண்ணும், மாப்பிள்ளையும் வந்து ஒரே விருந்து நடந்துகிட்டிருந்தது. எனக்கு ஆச்சர்யமாக போய்விட்டது. என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை, வேலைக்காரி பொண்ணு ஏதோ டிகிரி படித்துக் கொண்டிருப்பதாக அல்லவா சொல்லிக் கொண்டிருந்தாள் அந்த பெண்ணுக்கு எப்பொழுது கலயாணமாயிற்று? அவளுக்கு விருந்து வைத்தவள் என்னிடம் ஒரு வார்த்தை சொல்வதால் என்ன குறைந்து போயிற்று ? மனதுக்குள் கோபம் வந்து உட்கார்ந்தாலும் முகத்தில் மெல்ல புன்னகையுடன் சமாளித்து ராமையாவிடம் இருந்து தப்பித்தேன்.
முதலில் வேலக்காரியிடம் இதைப்பற்றி விசாரிக்க வேண்டும். அதன் பின்னால் இவளிடம் சண்டை பிடிக்க வேண்டும், போருக்கு ஆயத்தமானேன். மறு நாள் வேலைக்கு போகும் அவசரத்தில் அனைத்தும் மறந்து போக அதற்கு மறு நாள் வேலையை விட்டு வரும்பொழுது மனைவி கோயிலுக்கு சென்று விட்டதாக தெரிவித்த வேலைக்காரியிடம் மெல்ல பேச்சு கொடுத்தேன்.
என்ன பொன்னம்மா உன் புள்ளை கலயாணத்த எல்லாம் எங்கிட்டே கூட சொல்லாம முடிச்சுட்டே போலிருக்கு, வீட்டம்மா கிட்ட சொன்னவ எங்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா குறைஞ்சு போயிடுவியா ? உன்னைய உங்கம்மா காலத்துல இருந்து எனக்கு தெரியும். ஆனா என் வீட்டுக்காரி கிட்ட மட்டும் சொல்லிட்டு எனக்கு சொல்லாம இருந்திருக்கே? பார்த்துக்கொண்டிருந்தவள் கேவி கேவி அழ ஆரம்பித்து விட்டாள். நான் பயந்து பொன்னம்மா பொன்னம்மா எதுக்கு அழறே? நான் ஒண்ணும் தப்பா கேட்டுடலியே.
ஐயா நீங்க ஒண்ணும் தப்பா கேட்டுடலே, உங்களை சின்ன வயசுல இருந்து பார்த்துக்கிட்டிருக்கறேன் உங்களுக்கே தெரியாம இந்த கலியாணத்தை செஞ்சிருக்கண்னா ஏண்ணு யோசிச்சு பாருங்கய்யா. படிக்க போன இடத்துல காதல், அது இதுன்னு சொல்லி கல்யாணம் பண்ணி வைக்க்க்கூடிய நிலைமையில என்னைய விட்டுட்டாயா. அந்த பையன் வீட்டுல அதுதான் சாக்குன்னு மூணு பவுன் நகையும், பணம் பத்தாயிரமும் வச்சாத்தான் கலயாணம் அப்படீன்னு சண்டை புடிச்சாங்கய்யா. வந்து அம்மாகிட்டத்தான் அழுதேன். அம்மாதான் சூழ்நிலை புரிஞ்சு எப்படியோ இந்த கல்யாணத்தை நடத்தி கொடுத்தாங்க. புள்ளை நாம் சொல்றதை கேக்கறவளா இருந்தா இந்த ஊருக்கே சொல்லிட்டுத்தான் பண்ணியிருப்பேன். சொன்னவள் ஆற்றாமை தாங்காமல் அழுவதை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்..
காணாமல் போன பொருட்கள் காணாமல் போனதாகவே இருக்கட்டும், முடிவு செய்து கொண்டேன். இந்த பெண்ணின் கல்யாணத்தை கூட தெரிந்து கொண்டதாக காட்டிக்கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டேன்.