செய்த நன்றல்லால் உறுபயனோ இல்லை உயிர்க்கு – நாலடியார் 130
நேரிசை வெண்பா
மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி
எனைத்தூழி வாழ்தியோ நெஞ்சே - எனைத்தும்
சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால்
உறுபயனோ இல்லை உயிர்க்கு. 130
- தீவினையச்சம், நாலடியார்
பொருளுரை:
மக்கட்கு நல்வாழ்க்கை அமையும் பொருட்டு மனம் ஏங்கி வாழ்க்கைப் பற்றை இன்னும் விடமாட்டாய்; நெஞ்சமே, அதற்காக நீ எத்தனை ஊழி வாழவிருக்கின்றனையோ? சிற்றளவாயினும் செய்த அறச் செயலன்றி உயிர்க்கு அடையும் பயன் வேறு சிறிதும் இல்லை.
கருத்து:
செய்யும் நல்வினைகளே உயிரோடு தொடர்ந்து வரும்.
விளக்கம்:
வாழ்நாள் சிறிதாதலை நினைந்து ‘எனைத்தூழி வாழ்தியோ' எனப்பட்டது. எனைத்தும் இல்லை என்று கூட்டுக: