பொதி சுமப்பவன்

ஒரு அரசன் விருந்து வைப்பதாக அறிவித்தான். யார் அரச உடை உடுத்தி வருகிறார்களோ அவர்களே விருந்தில் கலந்து கொள்ள முடியும் .

ஒரு பிச்சைக்காரன் பார்த்தான்.பயம் இருந்தது. இருந்தாலும் தைரியமாக அரசனை பார்க்க காவலாளியிடம் அனுமதி பெற்று அரசனை பார்த்தான்.

அரசே உங்கள் விருந்தில் கலந்து கொள்ள ஆசை .ஆனால் என்னிடம் அரச உடை இல்லை . உங்களுடைய பழைய உடை ஏதாவது கொடுத்தால் நானும் அணிந்து கொள்வேன் என்றான்.

அரசன் தன் உடைகளில் ஒன்றை கொடுத்தான்.அணிந்துகொண்டான் .பக்கத்தில் வந்த அரசன் இனி உனக்கு இந்த உடை கிழியாது .அழுக்காகாது .உன்னை விட்டு போகாது. என்று சொன்னான். இவன் அரசர் கொடுத்த துணியை பார்த்தான்.

ஒருவேளை இது கிழிந்துவிட்டால் நான் வைத்துக் கொண்டிருக்கிற இந்தப் பழைய துணி மூட்டைகள் தேவைப்படும் என அந்த மூட்டையை கட்டி எடுத்துக்கொண்டு தோளிலே போட்டுக் கொண்டான். எங்கு போனாலும் அந்த அழுக்கு மூட்டையோடு சென்றான் .

அழுக்கு மூட்டையையே அனைவரும் பார்த்தனர். அரச உடையில் இருந்த அவனை பார்க்கவில்லை. பிச்சையும் சரியாக கிடைக்கவில்லை. பலர் வெறுப்பாக பார்த்தார்கள். அந்த மூட்டையால் அவனுக்கு நிம்மதி கிடைக்கவில்லை .
அரச உடையையும் அனுபவிக்க முடியவில்லை .இறக்கும் நிலைக்கு ஆளானான் .

அவனை அரசர் பார்க்க வந்தார்
.தலைமாட்டில் பழைய அழுக்கு மூட்டையை பார்த்தார். வருத்தப்பட்டார்.

நீ மட்டுமல்ல .அனைவரும் இப்படித்தான் இருக்கிறார்கள்.

ஆண்டவன் மகிழ்ச்சி கருணை மனிதம் அன்பு என்ற அற்புதமான அரச உடையை கொடுத்து இருந்தாலும் பொறாமை கோபம் வெகுளி காமம் ஆசை என்ற பழைய அழுக்கு மூட்டையை தூக்கிக் கொண்டு திரிகிறோம். அது நம்மை நிம்மதியாக வாழ விடாமல் யாருடனும் சேர விடாமல் கடைசியில் மனதால் நொந்து மரணத்தின் பிடியில் சிக்கி மாண்டு போகிறோம்.

கழுதை பொதி சுமப்பது போல் தேவையற்ற குணங்களை சுமக்காமல் இறைவன் கொடுத்த அற்புதமான வாழ்க்கையை புரிந்து நிம்மதியாக வாழ்வோம்.

எழுதியவர் : சு.இராமஜோதி (3-Jan-22, 4:45 am)
சேர்த்தது : ராமஜோதி சு
Tanglish : pothi sumappavan
பார்வை : 72

மேலே