அப்துல்கலாம் அண்ணல் -- வாழ்க நீ எம்மான்

அறிவார்ந்த ஏந்தலே!
அருங்குணச் செம்மலே!

கரைகாணா கல்விக்குக்
கலங்கரை விளக்கே,!

அப்துல்கலாம் அண்ணலே
போற்றி! போற்றி.!!

நீவிர்.
துஞ்சுதல் அறியா உழைப்பாளி
பஞ்சம் அறியா அன்பு வாதி

மஞ்சம் அறியா மந்திரவாதி
அஞ்சுதல் அறியா ஆண்மை வாதி.

நெஞ்சில் உரம் ஏற்றியே
நேர்மை திறம் காட்டியே

இளைஞர் நலம் போற்றியே
இனிது வாழ்ந்தீர் தாய்நாட்டிலே.

இறைவன் வஞ்சனை படைப்பாலே
குறை மிஞ்சிய உடம்பாலே

மனம் அஞ்சும் நடையாலே - இளம்
பிஞ்சுகள் படும் துயராலே

நெஞ்சம் நெகிழ்ந்தீர்!
கொஞ்சம் சிந்தித்தீர்!

தம் பதம் புரளாது நம்பியே
நாற்புறம் சுழன்றாட நன்றே

நடை சாதனம் வடித்தீர்!.
நற்சாதனை புரந்தீர்!!. - அவர்

பூமுகம் மலர்தல் கண்டு
பூரிப்பில் உள்ளம் மகிழ்ந்தீர்!.

அன்பெனும் ஈர்ப்பு வழியிலே .
அறிவு புகட்டும் விந்தைகள்
பல புரிந்தீர்.

பிஞ்சுகள் கனவுக் கான விழைந்தீர் - அவர்
புகழ் விஞ்சுதற்கு ஊக்கம் அளித்தீர்

பன்முக ஆற்றல் கொண்டீர்
பயனுறும் ஆற்றலாய் தொடுத்தீர்

விண்வெளி நோக்கி விரையும் தன்நிகரிலா ஊர்திகள் வடித்தீர்

பொற்புகள் பூத்து விளங்கும்
பொன் மனச் செம்மலே!

தாய்த் திருநாடு
*வல்லரசு* நிலை எய்தவே
நித்தமும் வேண்டியே

நின் ஆன்மா தவத்தில்
நாளும் நிலைத்திருக்கும்..

பிறப்பு எனும் விசித்திரம் தாண்டி
வாழ்க்கை எனும் சித்திரம் வரைந்து

சாதனை எனும் சரித்திரம் படைத்தீர்
முடிவிலாக் கீர்த்தி பெற்றீர்
புவிக்குள்ளே முதன்மை பெற்றீர்!

வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம்! வாழ்க!வாழ்க!!

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (24-Jan-22, 3:04 am)
பார்வை : 29

மேலே