மற்றில்லை தமக்கு மருத்துவர் தாம் - பழமொழி நானூறு 56
இன்னிசை வெண்பா
எமக்குத் துணையாவார் வேண்டுமென் றெண்ணித்
தமக்குந் துணையாவார்த் தாந்தெரிதல் வேண்டா
பிறர்க்குப் பிறர்செய்வ துண்டோமற் றில்லை
தமக்கு மருத்துவர் தாம். 56
- பழமொழி நானூறு
பொருளுரை:
எமக்கு ஓர் இடர் வந்தால் அதனைக் களைந்து துணை செய்வோர் வேண்டுமென்று நினைத்து தமக்கு உதவி செய்வோரைத் தாம் ஆராய்தல் வேண்டாம்;
பிறர் ஒருவருக்குப் பிறரால் செய்யத்தக்கது ஒன்று உண்டோ? துணை யாவாரைக் கண்டாலும் ஒரு சிறிதும் நன்மை விளைதல் இல்லை;
தம் நோயைத் தடுப்பார் தாமே யாவர்.
கருத்து:
நமக்கு வேண்டிய நன்மையை நாமே தேடிக் கொளல் வேண்டும்.
விளக்கம்:
அளவுக்கு மீறி உண்டு நோயைத் தாமே உண்டாக்கிக் கோடலின், அந்நோயைப் போக்கும் ஆற்றலும் அவர்க்கு உண்டாம். அதுபோல, தமக்குப் பிறர் வாயிலாக வருந் துன்பங்கள் யாவும் தம்மாலேயே செய்து கொள்ளப்பட்டன வாதலின், அதனைத் தாமே நீக்குதல் வேண்டும் என்பதாம். பிறரைத் தேடுதல் கூடாது.
'தமக்கு மருத்துவர் தாம்' என்பது பழமொழி.