நல்லா றொழுக்கின் தலைநின்றார் - நீதிநெறி விளக்கம் 61
நேரிசை வெண்பா
நல்லா றொழுக்கின் தலைநின்றார் நல்கூர்ந்தும்
அல்லன செய்தற்கு ஒருப்படார் - பல்பொறிய
செங்கண் புலிஏ(று) அறப்பசித்துந் தின்னாவாம்
பைங்கண் புனத்தபைங் கூழ். 61
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
பல புள்ளிகளையுடைய சிவந்த கண்களையுடைய புலியேறானது மிகுந்த பசிகொண்டாலும் பசுமையான இடமாகிய கொல்லைகளிலுள்ள பசிய பயிர்களைத் தின்னாதாம்.
அதுபோல், நன்னெறியொழுகுதலின் உறுதியாக நின்றவர்கள் வறுமையுற்றும் முறையல்லாதவற்றைச் செய்ய மனங்கொள்ள மாட்டார்.
விளக்கம்:
நல்ஆறு என்பது மனம், வாக்குக் காயங்களாலாகிய குற்றங்களில்லாத போக்கு;
அல்லன: கொலை, பொய், வஞ்சனை முதலியவை.
புலி ஏறு - ஆண் புலி. ஏறு:சிறப்பு மொழி.
கருத்து:
நல்லொழுக்கமுடையோர் வறுமை வந்த காலத்தும் தீச்செயல் புரிய நினையார்.