பெற்றதைவிட்டுப் பெறாததை விரும்பல் - நீதிநெறி விளக்கம் 64
நேரிசை வெண்பா
பெற்ற சிறுகப் பெறாத பெரிதுள்ளும்
சிற்றுயிர்க்கு ஆக்கம் அரிதம்மா - முற்றும்
வரவர வாய்மடுத்து வல்விராய் மாய
எரிதழன் மாயா திரா. 64
– நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
கிடைக்கக் கிடைக்கத் தன் வாயினுள் அடக்கி வலிய விறகுகள் முழுதும் எரிந்தழிய எரிகின்ற தீயும் அழியாது போவதில்லை; அழிந்தே போகும்;
அது போல, கிடைத்த பொருள் தமக்குச் சிறியவாகத் தோன்ற, கிடைக்காத பொருளை மிகுதியாக விரும்பிக் கருதும் குறுகிய வாழ்நாளையுடைய உயிர்களுக்கு பொருள் வளர்ச்சியும் அதனாலான பிற நன்மைகளும் உண்டாதல் அரிதாகும்.
விளக்கம்:
'போதுமென்ற மனமே பொன்செயுமருந்து' எனும் பழமொழி இங்கு நோக்கற்பாலது.
பெற்ற, பெறாத இரண்டும் பெயர்கள்.
அருமை - ஈண்டு இன்மைப் பொருட்டு. விறகு போடப்போடத்தீயும் அவற்றைப் பற்றிக் கொழுந்து விட்டெரியும்; மேல், விறகில்லையேல் எரிந்த விறகில் தங்கிய தீ நிலைத்தலின்றிச் சிறிது நேரத்தில் அவிந்து போகும்;
மேலும் மேலும் விறகுக்கு ஆசைப்படும் தீ, விறகு கிடைக்காவிடில் கிடைத்த விறகை எரிக்குமட்டிலேனும் நிலையாமல் உடனே அவிந்து போதலும் உண்டு, பேராசையுடையோர் இவ்விரு வகை நிலைக்கு உரியர்.
கருத்து:
பெற்ற பொருள் போதுமென மகிழ்ச்சி கொள்ளாது பேராசை கொண்டு பெரும் பொருள் விரும்புவோர், பெற்ற பொருளான பயனையும் இழப்பர்.