தத்தம் வளத்தனைய வாழ்வார் வழக்கு – நான்மணிக்கடிகை 71
இன்னிசை வெண்பா
ஊர்ந்தான் வகைய கலினமா; - நேர்ந்தொருவன்
ஆற்றல் வகைய அறஞ்செய்கை; தொட்ட
குளத்தனைய தூம்பின் அகலங்கள்; தத்தம்
வளத்தனைய வாழ்வார் வழக்கு 71
- நான்மணிக்கடிகை
பொருளுரை:
கடிவாளம் பூண்ட குதிரைகள் அவற்றை ஏறிச் செலுத்துவானது திறத்துக்கு ஒத்தன;
அறச் செயல்கள் இசைந்த ஒருவனது ஆற்றலைப் பொறுத்தன;
நீர்க் காலின் பரப்புக்கள் தோண்டப்பட்ட குளங்களின் அளவின;
இல் வாழ்வாருடைய வாழ்க்கைச் செய்கைகள் அவரவரது வருவாய்ச் செழுமையை ஒத்தன.
கருத்து:
குதிரைகள், சவாரிசெய்வானது திறத்துக்கு ஒத்தன; ஒருவனுடைய அறச்செயல்கள் அவன்றன் ஆற்றலைப் பொறுத்தன;
நீர்க்காலின் அகலங்கள் குளத்தின் அளவின; இல்வாழ்வார் வாழ்க்கைகள் அவரவர் வருவாய்ச் செழிப்பை ஒத்தன.
விளக்கவுரை:
குளங்களின் அளவுக்கேற்கவே நீர்செல்லும் நீர்க்கால்கள் அவற்றிற்கு அமைக்கப்பட்டிருக்கும் என்க.
தூம்பு - நீர் வெளியே இழியும் நீர்க்கால்; மதகு, கலங்கல் முதலியனவுமாம்.
கலினம் - கடிவாளம். தொடுதல் - தோண்டுதல். தூம்பு - உட்டுளை.