முன்னைத்தம் ஊழ்வலி உன்னிப் பழிநாணி உள்ளுடைவார் - நீதிநெறி விளக்கம் 76
நேரிசை வெண்பா
(’ன்’ ‘ந்’ மெல்லின எதுகை, ’வ’ ‘ய’ இடையின எதுகை)
(‘ழ்’ இடையின ஆசு)
நன்மக்கள் செந்நாத் தழும்பிருக்க நாள்வாயும்
செந்நெறிச் செல்வாரின் கீழல்லர் - முன்னைத்தம்
ஊழ்வலி உன்னிப் பழிநாணி உள்ளுடைவார்
தீய செயினுஞ் சில. 76
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
முற்பிறப்பிற் செய்த தமது பழைய ஊழின் வலிமையை நினைந்து, வருகின்ற பழிச் சொற்களுக்கு வெட்கி மனம் வருந்துவோர் ஒருகாலத்தில் அறிவு மயங்கியேனும் பிற காரணங்களாலேனும் சில தீயகாரியங்களைச் செய்தாராயினும் அவர்கள்,
மேன்மக்கள் செவ்விய நாவினை இடைவிடாமல் தம் நன்மையை எடுத்துரைத்தலால் தழும்பேறிருக்கும்படி நாள்தோறும் நல்லொழுக்க வழிகளிலே செல்லும் மேலோரினும் கீழாகார்.
விளக்கம்:
தாம் அறியாமல் ஊழ்வினையால் மதிமயங்கித் தீய காரியங்கள் செய்ய நேர்ந்து அதனால் வரும் பழிக்கு நாணி மனம் வருந்துவோர், மேலும்மேலுந் தீய காரியங்களைச் செய்யாராதலின் அதனால் அவர் பெருமை குன்றுதலிலர்.
நாள்வாயும் -:நாடோறுமென்னும் பொருள் தந்து நின்றது. கீழ்: கீழோரை உணர்த்திற்று;. உன்: மனத்தை உணர்த்திற்று.
நல்லோர் இடைவிடாது புகழ என்பார், ‘நன்மக்கள் செந்நாத் தழும்பிருக்க’ என்றார்; செந்நா - உண்மையாகிய செம்மையயுடைய நா.
கருத்து:
மேன்மக்கள் ஒருவேளை ஊழ்வலியால் நல்லொழுக்கத்தினின்று தவறினும், அவர்கள் உள்ளுடைந்து வருந்துதலின் நன்மக்களேயாவர்.