மிகவும் உயர்வாகிய முக்குணங்கள் மூன்று – அறநெறிச்சாரம் 107
நேரிசை வெண்பா
(’ய்’ மேல் உயிர் அ ஏறிய எதுகை)
தூயவாய்ச் சொல்லாடல் வன்மையும்* துன்பங்கள்
ஆய பொழுதாற்றும் ஆற்றலும் - காய்விடத்தும்
வேற்றுமை கொண்டாடா மெய்ம்மையு மிம்மூன்றும்
சாற்றுங்கால் சாலத் தலை. 107
– அறநெறிச்சாரம்
பொருளுரை:
குற்றமில்லாமல் சொல்லுங் குணமும், துன்பமடைந்த விடத்தும் அதனால் தளர்ச்சி அடையாதிருக்கும் பொறுமையும், தம்மை வெறுப்பவரிடத்தும் வேற்றுமை கொள்ளாத உண்மை நிலையும், கூறுமிடத்து இவை மூன்றும் மிக உயர்ந்தனவாகும்.
குறிப்பு: கொண்டாடல் - மேற் கொள்ளல்.
(பாடம்) *வண்மையும்