யானை யனையவர் நண்பொரீஇ – நாலடியார் 213

இன்னிசை வெண்பா

யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்; யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய். 213

- நாலடியார்

பொருளுரை:

யானையை ஒத்த இயல்புடையாரது நேயத்தை நீக்கி நாயை ஒத்த இயல்புடையாரது நேயத்தைத் தழுவிக்கொள்ளுதல் வேண்டும்;

ஏனென்றால், யானை பலநாள் பழகியிருந்தும் தன்னை வளர்த்த பாகனையே குற்றங்கண்டு கொல்லும்;

ஆனால் நாயோ தன்னை வளர்த்தவன் சினத்தால் தன்மேல் வீசிய வேல் தன் உடம்பில் உருவி நிற்க அன்பினால் அவனிடம் வால் குழைத்து நிற்கும்.

கருத்து:

பிழை பாராட்டாத இயல்புடையாரை அறிந்து நட்புச் செய்தல் வேண்டும்.

விளக்கம்:

அறிந்தறிந்தும் - நன்றாய் அறிந்திருந்தும்; பலகால் தனக்கு உதவிகள் செய்திருப்பதை நன்றாய்த் தெரிந்திருந்தும்.

மெய்யதா - உடம்பினதாக, வால் குழைத்தல் - வாலை வளைத்து ஆட்டுதல்,

இது அன்பு பாராட்டுதற்கு அறிகுறி. நாய் உவமை அதன் உயர்ந்த பண்பினால் இங்கே உயர்வடையதாயிற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-May-22, 4:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 812

மேலே