35ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 35
ஆன்மீக வழியில் அமைதி...
எழுத்தாளர் :பூ.சுப்ரமணியன்
மனதை ஒருமுகப்படுத்துவதனால் நமக்கு என்ன பயன் அல்லது பலன்கள் கிடைக்கும் என்று சிந்தித்துப் பார்த்தால், நாம் எந்தப்பணி செய்தாலும் எத்தகைய சூழ்நிலையில் இருந்தாலும் மன ஒருமுகப்படுத்தி செய்யும்போது அதில் வெற்றி காணலாம். ஆன்மீகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு ஞானத்தை நாம் விரைவில் அடையலாம். மனதினை ஒருமுகப்படுத்தும்போது தேவையில்லாத எண்ணங்கள் நம் மனதில் தோன்றி நமது மனதை துன்பப்படுத்துவதில்லை. மேலும் மனம் வீணாக சஞ்சலப்படுவதில்லை. மனோசக்தியானது இயல்பாக நம் மனதுக்குள் ஏற்பட்டு விடும். நமக்கு மன சஞ்சலம் , மன குழப்பம் போன்றவை என்பது இருக்காது. அவ்வாறு இருந்தாலும் அதை தாங்கிக் கொள்ளும் மனோசக்தி நமக்கு ஏற்பட்டு விடும். அதாவது நாம் மன பக்குவத்தை அடைந்து விடுவோம்.

மனதினை ஒருமுகப்படுத்தும் பயிற்சியை நாம் நாள்தோறும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும்போது மனதில் தேவையில்லாத எண்ணங்கள் துன்பங்கள் வந்தால் அவற்றை தடுப்பதற்கு நம் மனதுக்கு தேவையான கட்டளையிடுவதற்கு முடியும். நமது மனதை சிலவற்றை எண்ணாதே என்று மனதுக்குள் உணர்வுபூர்வமாக கட்டளையிட்டு விட்டால் மனதும் நமது கட்டளைக்கு கட்டுப்படும். கடவுள் நம் முன்னே தோன்றி உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால் உலகில் பெரும்பாலோனோர் நிரந்தரம் இல்லாத செல்வம், சொத்துகளைத்தான் வரிசைப்படுத்திக்கொண்டு முதலில் கேட்பான். அவன் இறுதியாக வேண்டாத விருப்பமாக மோட்சம் வேண்டும் என்று கேட்பான். மனிதன் ஏன் மோட்சத்தை இறுதியாகக் கேட்கிறான் என்றால் மோட்சம் அடைந்து விட்டால் இந்த உலக இன்பங்களை அனுபவிக்க முடியாது என்று மனதுக்குள் எண்ணிக்கொள்கிறான்.

மோட்சம் என்றால் மன நிறைவான ஆசை என்று பொருள்படும். மன அமைதி வேண்டுமென்று யாரும் கோவில்களில் சென்று கடவுளிடம் வேண்டுவதில்லை. பலபேர் வாழ்க்கையில் கஷ்டப்படுபோதுதான் கடவுளை நினைத்து கோயில் குளம் என்று சுற்றுவான். மனிதன் கஷ்டப்படாமல் மகிழ்ச்சியாக இருக்கும்போது ஏன் கடவுள் என்று ஒருத்தன் நம் கண்களுக்குத் தெரியாமலே இருக்கிறான். மனக்கஷ்டம் பணக்கஷ்டம் வரும்போதுதான் கடவுளைப்பற்றி அப்போதுதான் அவனுக்கு நினைவுக்கு வருகிறது. அதேபோல் அவன் அனுபவித்த கஷ்டங்கள் எதோ ஒருவிதத்தில் அவனை அறியாமல் மறைந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

அப்போது அவன் மகிழ்ச்சியில் இன்பத்தில் மூழ்கி விடுகிறான். தன் கஷ்டங்களை கூறி தான் வேண்டிய கடவுளைப் பற்றி அப்போது மறந்து விடுகிறான். உலக வழக்கில் எவ்விதக்கஷ்டமும் இல்லாமல் மிகவும் சந்தோசமாக இருக்கும்போது ஜோதிடம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வருவதில்லை. அவன் அப்போது கிரகநிலைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. திடீரென்று தனக்கு தாங்கமுடியாத கஷ்டங்கள் வரும்போதுதான் அவன் கிரக நிலைகளைப்பற்றி அறிந்து கொள்வதற்கும் பரிகாரங்கள் செய்வதற்கும் ஜோதிடர்களை நாடுகிறான்.

துன்பத்திலும் இன்பத்திலும் கடவுளை மறக்காமல் நமக்கும் மேல் ஒரு சக்தி உலகில் இருக்கிறது என்று மனிதர்கள் எண்ணும்போது மன அமைதியுடன் வாழ்கிறான். என்ன கஷ்டம் வந்தாலும் மோட்சத்தை அடைந்தே தீருவேன் என்ற தீவிர எண்ணம் மனிதனுக்கு ஏற்படவேண்டும். தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருப்பவன் எப்படி மூச்சு விடுவதற்குத் தவிக்கிறானோ அப்படி மோட்சம் அடையவேண்டும் என்ற தவிப்பு மனதில் ஆர்வம் இருக்க வேண்டும். உலகில் காணும் இன்பங்களில் மூழ்கி உலகத்தில் காணும் இன்பங்களே நமது மன அமைதிக்கு துணை புரியும் என்று மனிதன் தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறான். இது மனிதனுடைய தவறான முடிவு ஆகும். உலகில் காணும் இன்பங்களை நாம் தர்ம நியாயப்படி அனுபவிக்கலாம். ஆனால் உலக இன்பங்களில் மூழ்கி விடக்கூடாது.

உலகில் பற்றற்று வாழ்வது ஞானத்தின் வேதாந்தத்தின் முடிவாகும். எனவே நாம் மோட்சம் அடைய வேண்டும் என்று தீவிர ஆசை கொள்ள வேண்டும் என்று குரு சீடனிடம் கூறிகிறார் என்று வைத்துக் கொள்வோம். உடனே ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின் என்று திருமூலர் கூறியதை சீடனுக்கு குருவிடம் கேள்வி கேட்கத் தோன்றி விடும். இந்த ஆசையானது முற்றும் துறந்த முனிவர்களுக்கு திருமூலர் கூறியது ஆகும். மனிதனும் ஈசனும் ஒன்று என்ற மனநிலை முற்றும் துறந்த முனிவர்களுக்கு வந்து விடும். அவர்களுக்குதான் உலகில் எப்பொருள் மீதும் ஆசைப்படக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்கு ஆசை அறுமின் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின் என்று கூறப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மிதிலையை ஆட்சி புரிந்த மன்னன் ஜனகன் பற்றற்று வாழ்ந்தான் என்று இதிகாசம் கூறுகிறது.

அனைத்துப் பொருள்கள் மீதுள்ள ஆசைகளில் முதலில் நாம் விரும்பும் ஆசை மோட்சமாக இருக்க வேண்டும். நான் மோட்சத்தை அடைவதற்குத் தேவையான ஆசைகளை தவிர மற்ற ஆசைகள் எதுவும் எனக்கு வேண்டாம் என்ற மனதில் வைராக்கியம் மற்றும் ஆசை வர வேண்டும். பொதுவாக இந்த மோட்சம் அடையவேண்டும் என்ற ஆசை நமக்கு வந்து விடும்போது, உலகில் காணும் நிலையற்ற இன்பங்கள் ஆசைகள் இயல்பாகவே நம்மைவிட்டு மறைந்து விடும்.

ஒருவன் இசையில் நன்கு தேர்ச்சி பெறவேண்டும் என்றால் ஐஸ்கிரீம் போன்ற குளிர் பானங்களின் மீது ஆசையை அவன் இயல்பாக தவிர்த்து விடுவான். அதேபோல் ஒருவன் தனக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள மணக்க மணக்க உள்ள பில்டர் காபியை அருந்த நினைக்கிறான். அந்தக் காபியில் எதிர்பாராமல் ஒரு பல்லி விழுந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அவன் அந்த காப்பியை அருந்த விரும்புவானா? அந்தக் காபியை அருந்த ஆசை இருந்தும் அந்த ஆசையை விட்டு விடுகிறான். ஏன் என்றால் காபியில் பல்லி விழுந்திருப்பதை கண்டவுடன் தன்னோட ஆசையை இயல்பாகவே விட்டுவிட அவன் தயாராகி விடுகிறான்.

ஆசை இருந்தும் உலகில் உள்ள பொருள்களில் நிரந்தரமான இன்பங்கள் இல்லை. நிலையற்ற பொருள்கள் மீது ஆசை வைக்காமல் உலகில் மோட்சம் அடைவதுதான் நமது லட்சியம் என்று அவன் மனம் எண்ணி விடும்போது, அவன் தேடும் விரும்பும் மன அமைதி அவனைத் தேடி வந்து விடும். மனிதன் தனது வாழ்க்கைக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருள்கள் மீது ஆசை வைத்துக் கொள்ளலாம் என்று சாஸ்திரங்கள் இதிகாசங்களும் கூறுகின்றன.

உலகில் உள்ள பொருள்களில் எது நிலையானது எவை நிலையற்றது என்பதை அறியும் ஞானம் வரும்போது அவன் தேடும் விரும்பும் மன அமைதி அவனுக்குள் வந்து விடும். அதேபோல் இந்த உலகில் வந்து மனிதனாய் பிறந்து விட்டாய், உலகில் உனக்கு உள்ள கடமைகளை செய்ய வேண்டும் என்றும், அதற்குப் பிறகுதான் மோட்சத்தை நாடுவதற்கு தீவிர முயற்சியை மேற்கொள்ள வேண்டும். என்று சாஸ்திரங்களும் இதிகாசங்களும் கூறுகின்றன. பெரும்பாலான மனிதர்கள் தங்கள் உலக கடமைகள் எல்லாம் முடிந்து விட்டாலும் அதில் இருந்து மீள்வதற்கு விரும்புவதில்லை. உலக இன்பத்திலே மூழ்கி விடுவதால் மோட்சத்தை பற்றி அவர்கள் நினைப்பதில்லை. மோட்சம் என்பது நிலையான ஆனந்தமான பேரின்பம் ஆகும். அந்த பேரின்பத்தை அடைந்து விட்டால் மனிதனுக்கு அமைதி அவனை விட்டு அகல்வதில்லை.

வயிற்றுப்பசியுடன் காணப்படும் ஒருவன் தான் சாப்பிடும் உணவின் ருசியினைப் பற்றி அப்போது அவன் கவலைபடுவதில்லை. அதுபோல் மோட்சத்தினை விரும்புகிறவன் உலகில் காணும் நிலையற்ற இன்பங்களை பற்றி எவ்வித கவலையும் கொள்வதில்லை. இந்த உலகத்தையும் அதில் காணும் பொருள்கள், உனது பந்தபாசங்கள் உறவுகள் மீது உன்னை வெறுத்து ஒதுக்கும்படியாகவோ உன்னை ஒதுங்கும்படியாகவோ சாஸ்திரங்கள், இதிகாசங்கள், புராணங்களோ கூறவில்லை. நீ இந்த உலகத்தில் இரு. ஆனால் உலக இன்பங்களிலே மூழ்கி விடாதே என்றுதான் கூறுகிறது.

தாமரை இலைத் தண்ணீரைப்போல் உலகில் உன் கடமைகளை செய்து கொண்டிருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. இதனைப் பற்றி நன்கு புரிந்து கொண்டவர்கள் உலகில் இன்பமாக மன அமைதியுடன் வாழ்கிறார்கள். இல்லறத்தில் இருந்து கொண்டு துறவற வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். வீடு வாகனம் மற்றும் உலகில் காணக்கூடிய பொருள்களினால் வரக்கூடிய இன்பங்கள், இந்திரியங்கள் மூலம் வரக்கூடிய இன்பங்கள் எல்லாம் நிலையில்லாதது என்பதை அறிந்துகொண்டு அதற்கு மனதளவில் அணை கட்ட வேண்டும். நிலையான பேரின்பமான மோட்சத்தை நாடுவதற்கு ஆன்மீக வழியில் முயற்சியினை மேற்கொள்ளவேண்டும்.

மனிதர்கள் யோகா (தியானம்) செய்யாமல் உலக போகத்தில் மூழ்கினால் அவனிடம் ரோகம்தான் வந்து சேரும்.. வாழ்வில் மன நிறைவு வர வேண்டும் என்று நினைத்து உலக இன்பங்களை அனுபவத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த இன்பங்களில் மயங்கி மூழ்கி விடக்கூடாது என்று புராணங்களும் இதிகாசங்களும் சாஸ்திரங்களும் கூறுகின்றன. உலக ஆசைக்கு அளவே இல்லை என்பதை நன்கு தெரிந்து கொண்டு மனதுக்கு ஒரு கட்டுப்பாடு விதித்து நமது ஆசைக்கு முடிவு செய்தல் வேண்டும் முடிவில்லாத ஆசையினால் விளையும் துன்பங்களைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும். உலக இன்பங்கள் எல்லாம் நிரந்தரம் அல்ல என்ற ஞானம் மனிதனுக்கு வந்து விடும்போது அவன் வாழ்வில் அமைதி தானாகவே வந்து சேரும்.

மோட்சம் அடைய வேண்டும் என்பது எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆசை இருந்தால் மட்டும் போதாது. மோட்சம் வேண்டும் என்றால் தீவிரமாக நாம் ஆன்மீக வழியில் முயற்சியினை மேற்கொள்ள வேண்டும். இச்சா சக்தியிலிருந்து ஞானசக்திக்குப் செல்வதற்கு குருவின் உபதேசங்களைக் கேட்டு அதன்படி தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இச்சா சக்தி என்றால் ஆசைப்படுதல் ஆகும். மோட்சம் அடைவதற்கு முதலில் ஆசைப்படுதல் வேண்டும். கிரியா சக்தி செயல்புரிவதற்கு சக்தி தேவை. அது கிரியா சக்தியாகும். ஞானசக்தி மூலம்தான் மோட்சம் என்னும் ஞானத்தை அடைய முடியும். மோட்சம் என்றால் நிறைவான வாழ்வு என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

ஒவ்வொருவரிடமும் அவர்களது ஆசைகள் பற்றி கேட்டால் பலவிதமான ஆசைகள் வரிசையாகத் தெரிவிப்பார்கள். சொத்து, பணம், புகழ் மற்றும் சுகமான வாழ்வு போன்றவற்றை தெரிவிப்பார்கள். ஆனால் மோட்சம் அடைய வேண்டும் என்று பெரும்பாலும் விரும்புவதில்லை. இவ்வுலகில் வாழும்வரை உலக இன்பங்களை அனுபவித்தால் போதும் என்றுதான் பெரும்பாலான மக்கள் நினைப்பார்கள். மோட்சம் அடைவதற்கு அதற்குரிய தகுதியான சாதனைகள் செய்து அதன்மூலம் மோட்சத்தை அடைய ஆசைப்படவேண்டும்.

புத்த பகவான் நிலையற்ற உலகப்பொருள்கள் மீது ஆசை படக்கூடாது என்று போதித்துள்ளார். ஆசை அறுமின் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின் என்று ஞானிகள் கூறியுள்ளார்களே என்று கேட்கத் தோன்றும். ஞானிகள் நீயும் ஈசனும் ஒன்றுதான் வேறில்லை என்ற ஞானம் வந்தவர்களுக்கு மட்டும் ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடு ஆயினும் ஆசையை அறுமின் என்று ஆசையைப் பற்றி கூறியுள்ளார்கள் என்பதை இந்த இடத்தில் புரிந்து கொள்ள வேண்டும். ஞானத்தின் முடிவு நீயும் ஈசனும் ஒன்று ஆகும் என்பதை உணர்தலாகும்.

மோட்சம் அடைவதற்கு ஆசை இருக்கிறது. அந்த ஆசையை எப்படி நீங்கள் வளர்க்க வேண்டும் என்றால் நெருப்பை வளர்ப்பதுபோல் வளர்க்க வேண்டும். ஞானம் என்ற அறிவு அந்த இடத்தில் அவருக்கு வந்து விடுகிறது. அதேபோல் தனது இச்சைகளை எல்லாம் ஞானம் பெறுவதற்கு தக்கவாறு ஆசைகளை மாற்றிக் கொண்டு ஆன்மீக வழியில் பயிற்சியை மேற்கொள்ளவேண்டும். உலக இன்பங்களில் நிலையானது நிலையற்றது என்பதை பிரித்து அறியும் அறிவு வரவேண்டும். விவேகம் வந்து விட்டால் நிலையானது மீது இச்சை தானாக நமக்கு வந்து விடும். நிலையற்றது எது என்பதை அறிந்தவுடன் அதிலிருந்து நாம் விலகுவது என்ற அறிவு இயல்பாகவே வந்து விடும்.

மோட்சத்தை அடைய வேண்டும் என்ற ஞானம் வந்து விட்டால் நமது ஆசைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து விடும். தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருப்பது கண்களுக்கு கெடுதல், கண்களைப் பாதிக்கும் என்று மருத்துவர் அறிவுறுத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நமக்கு விருப்பமானவைகளை காணொளியாக ஒளிபரப்பினாலும் தொலைக்காட்சியை நாம் கண்டு மகிழ்வதற்கு நினைக்க மாட்டோம். தொலைக்காட்சி பார்ப்பதால் நமது கண்களுக்கு கெடுதல் வந்துவிடும் என்று பயந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதை தவிர்த்து விடுகிறோம்.

அதேபோல் உலகில் உள்ள இன்பங்கள் நிலையற்றவை என்ற அறிவு ஞானம் வந்து விட்டால் உலகில் காணும் இன்பங்களை வெறுத்து அல்லது அவைகளிலிருந்து விலகிக்கொண்டு மோட்சத்தின் மீது நாட்டம் ஏற்பட்டு விடும். மோட்சம் அடைய வேண்டும் ஆசை தீவிரமாக ஏற்படும்போது நமது உலகில் காணும் நிலையற்ற இன்பங்களை ஆசைகளை இயல்பாகவே துறக்க முடிவு செய்து விடுவோம். நமது ஆசைகளை கட்டுப்படுத்தும்போது நாம் தேடும் விரும்பும் மன அமைதி கிடைக்கும். .(அமைதி தொடரும்)

எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (16-May-22, 12:27 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 29

சிறந்த கட்டுரைகள்

மேலே