தெரியத் தெரியுந் தெரிவிலா தாரைப் பிரியப் பிரியுமாம் நோய் – நாலடியார் 247

நேரிசை வெண்பா

உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரப் புணருமாம் இன்பம் - புணரின்;
தெரியத் தெரியுந் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய் 247

- அறிவுடைமை, நாலடியார்

பொருளுரை:

நட்புச்செய்தால் நாம் ஒன்றை உள்ளத்தால் உணர அதனைக் குறிப்பால் உணர்ந்தொழுகுங் கூருணர்வுடையாரை நட்புச் செய்யின் இன்பம்பொருந்தும்;

நம் கருத்துக்கள் வெளிப்படையாகத் தெரிய அந்நிலையிலும் அவற்றை அறிந்தொழுகும் அறிவிலாதாரை நட்புச் செய்யாமற் பிரிந்திருக்கத் துன்பங்களும் நம்மைச் சேராமற் பிரிந்திருக்கும்.

கருத்து:

குறிப்பறிந்தொழுகும் கூரறிவாற்றலால் இன்பம் விளையும்.

விளக்கம்:

‘குறிப்பிற் குறிப்புணர்வாரை உறுப்பினுள், யாது கொடுத்துங் கொள்' 1 லென்பவாகலின்,இங்ஙனங் கூறினார்.

‘ஒருகால் தெரியத் தெரியுந் தெரிவிலா தாரைத் தவறாகப் புணரின் அவரைப் பிரிய நோய் பிரியும்' என்றும் உரைக்கலாமேனும், எந்நிலைக் கண்ணும் பிரிதலென்பது கூடாமை மேல் நிறுத்தப்பட்டமையின் அது பொருந்தாது. ‘பிரியப் பிரியுமாம் நோய்' என்றது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jul-22, 4:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

சிறந்த கட்டுரைகள்

மேலே