சிறகடிக்கும் மழை
வரவிருக்கும் மழை
உன் முத்தங்களுக்கு
முன் வருமா
பின் வருமா
என்பது தெரியாமல்
இதழ்கள் பிரிக்காது
வைத்திருக்கிறோம்.
பாலைச்செடிகள் போல்
ஆதுரத்துடன் மழை நோக்கி
செல்கிறோம் கரம் பற்றி...
அப்போதுதான் கேட்டாய்
நீ என்னிடம்...
உன்னோடு பேசவேண்டியது
தோய்ப்பதில் அடங்கியது.
உன்னோடு பார்க்கவேண்டியது
வீடு கழுவுதலில் கரைந்தது.
உன்னிடம் காட்டவேண்டியது
தாளிப்பில் சிதறி வெடித்தது.
உன்னிடம் பகிர வேண்டியது
சமைப்பதில் கலந்து போனது.
எனது காமம் தனது
நெற்றிக்கண்ணை திறந்திட
எந்த அறையிலிருந்து கிளம்பி
எந்த அறைக்குள் பதுங்கி
உன் நீண்ட அணைப்பில்
நான் திளைப்பது என்கிறாய்.
மழை
சிறகடித்து வருகிறது.
நமது இதழ்கள்
பற்றி இழுத்து கொள்கிறது.