தீயன ஆவதே போன்று கெடும் - பழமொழி நானூறு 173
நேரிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு)
அல்லது செய்வார் அரும்பொருள் ஆக்கத்தை
நல்லது செய்வார் நயப்பவோ - ஒல்ஒலிநீர்
பா’ய்’வதே போலும் துறைவ,கேள்! தீயன
ஆவதே போன்று கெடும். 173
- பழமொழி நானூறு
பொருளுரை:
ஒல்லென்று ஒலிக்கும் நீர் கற்பாறை மீது பாய்வதே போன்று விளங்கும் கடல் துறையை உடையவனே, கேள்!
தீச்செயல்களால் உண்டாகிய செல்வம் பெருகுவதே போன்று தோற்றுவித்துத் தன்னெல்லையைக் கடந்து கெட்டுப்போகும்;
ஆதலால், தீவினை செய்வாரது அரிய பொருளாகிய பொருட்செல்வத்தை நல்வினையைச் செய்வார் விரும்புவரோ? விரும்ப மாட்டார்கள்.
கருத்து:
தீய வினைகள் செய்து பொருளீட்டியவரின் செல்வ நிலையாமையை அறிந்து நல்லோர் அதனைப் பொருளாக மதிக்கமாட்டார்களாதலால், தீவினை செய்து பொருளீட்டல் ஆகாது எனப்படுகிறது.
விளக்கம்:
பெறுதற்கரிய செல்வம் தீயார் கைப்படுதலின் நல்லோரால் விரும்பப்படுதலின்றி ஒழிந்தது என்று இரங்குவார் போன்று 'அரும்பொருள்' என்றார்.
தீயன செய்வார் செல்வம் போகும்பொழுது பாவத்தையும் பழியையும் நிறுத்தி, செய்த அறத்தை உடன்கொண்டு போதலின், நல்லது செய்வார் அதனை விரும்புதலிலர்.
புதுவெள்ளம் வந்து பழைய வெள்ளத்தையும் கொண்டு போனது போல, தீயார் செல்வம் வருவது போன்று தோன்றி, வந்த அளவினும் மிகுந்து போவதாம்.