இன்மை தழுவப்பட் டார்க்கு சிறந்ததங் கல்வியும் மாயும் - நாலடியார் 285
நேரிசை வெண்பா
பிறந்த குலமாயும்; பேராண்மை மாயும்
சிறந்ததங் கல்வியும் மாயும் - கறங்கருவி
கன்மேற் கழூஉங் கணமலை நன்னாட!
இன்மை தழுவப்பட் டார்க்கு 285
- இன்மை, நாலடியார்
பொருளுரை:
பாய்ந்து ஒலிக்கின்ற அருவிநீர் கற்களின் மேற்புறத்தைக் கழுவுகின்ற கூட்டமான மலைகளை உடைய சிறந்த நாடனே!
உலகத்தில் வறுமை பொருந்தியவர்க்கு அவர் பிறந்த குலத்தின் பெருமை கெடும்; அவருடைய பேராற்றல் கெடும்; எல்லாவற்றிற்கும் மேலான அவர்தம் கல்வி நிலையும் கெடும்!
கருத்து:
வறுமை பொருந்தியவர்க்கு இருமை நலங்களுங் கெடும்
விளக்கம்:
குலமென்றது ஈண்டுக் குடி; ஆண்மை – திறமை;
கல்வி எழுமையும் ஏமாப்புடைத்தாகலின்1 ‘சிறந்த கல்வி'யெனப்பட்டது.