பாசத்துள் இட்டு விளக்கினுங் கீழ்தன்னை மாசுடைமை காட்டி விடும் – நான்மணிக்கடிகை 98
நேரிசை வெண்பா
மாசு படினும் மணிதன்சீர் குன்றாதாம்
பூசிக் கொளினும் இரும்பின்கண் - மாசொட்டும்
பாசத்துள் இட்டு விளக்கினுங் கீழ்தன்னை
மாசுடைமை காட்டி விடும் 98
- நான்மணிக்கடிகை
பொருளுரை:
அழுக்குப் பட்டாலும் நன்மணி தன் பெருமை குறையாது; கழுவி எடுத்துக்கொண்டாலும் இரும்பினிடத்தில் அழுக்குச் சேரும்;
கீழான மனப்போக்குள்ள மக்களைத் தளையிலிட்டு ஒறுத்தாலும் கீழ்மை இயல்பையே காட்டி விடுவான்; அல்லது அறிவு கூறி விளக்கினாலும் கீழ்மையான குணத்தையே காட்டுவான்.
விளக்கவுரை:
மணிக்குச் சீரென்றது ஒளி; இரும்புக்கு மாசென்றது துரு. அசை; பூசுதல், கழுவுதல்;
பாசத்துள் இடினும், விளக்கினுமென இரண்டாய்ப் பிரித்துரைத்துக் கொள்க.
அன்றி நான்மணிக்கடிகையில் ஒவ்வொரு செய்யுளினும் நந்நான்கு பொருள்களே சொல்ல வேண்டுமாயினும், ஒரோவொரு செய்யுளில் மூன்று பொருள்கள் காணப்படுதலை நலிந்து பொருள் கொள்ளாது, நூற்பெயர், மிகுதிபற்றி யமைந்ததெனவுங் கொள்ளலாம்.
கீழ்க்கு மாசென்றது அறியாமை!