சோர்வின்றி மாறுபவே வில்லோடு காக்கையே போன்று - பழமொழி நானூறு 193
நேரிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு)
தீப்பால் வினையினைத் தீரவும் அஞ்சாராய்க்
காப்பாரே போன்றுரைத்த பொய்குறளை – ஏ’ய்’ப்பார்முன்
சொல்லோ(டு) ஒருப்படார் சோர்வின்றி மாறுபவே
வில்லோடு காக்கையே போன்று. 193 - பழமொழி நானூறு
பொருளுரை:
கொடிய செயல்களின் பாற்பட்ட வினைகளுக்கு மிகவும் அஞ்சாதவர்களாய் தம்மைக் காப்பாற்றுகின்றவர்களைப் போல் கூறிய பொய்யாலும் குறளையாலும் தம்மை ஏமாற்றுகின்றவர்கள் முன்பு,
அவர் கூறிய இனிய சொற்களுக்கு இணங்காதவர்களாய் வில்லைவிட்டு நீங்கும் காக்கையைப் போல தளர்ச்சியின்றி விட்டு நீங்குவார்கள்.
கருத்து:
தீயார் சொற்களைக் கேட்டவுடனேயே அவர்களைவிட்டு நீங்குவர் நல்லோர்.
விளக்கம்:
குறளை என்பது கோட்சொல். வில் என்றது சிறுவர்கள் மண் உருண்டை கொண்டு எய்யும் வில்.
ஒருமுறை அதன் கொடுமை யறிந்தவுடன் காக்கை பறந்து போதல் போல், அறிவிலார் சொற்களைக் கேட்டதும் உடனே விட்டு நீங்குவர் அறிவுடையோர்.
'வில்லோடு காக்கையே போன்று' என்பது பழமொழி.