தம்மை மருண்ட மனத்தார்பின் செல்பவோ தாமும் தெருண்ட அறிவி னவர் - நாலடியார் 301

நேரிசை வெண்பா

நம்மாலே ஆவரிந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றுந்
தம்மாலாம் ஆக்கம் இலரென்று - தம்மை
மருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும்
தெருண்ட அறிவி னவர் 301

- இரவச்சம், நாலடியார்

பொருளுரை:

இவ் வறுமையாளர் நம் உதவியினாலேயே வாழ்வு பெறுதற்குரியர்; எந்தநாளிலும் தம் வல்லமையால் உண்டாகப்பெறும் வாழ்வு இல்லாதவர் என்று செருக்கித் தம்மை உயர்ந்தோராக மயங்கிப் பெருமிதங் கொள்ளும் மனப்பான்மையுடையார் பின்னே,

தெளிந்த மெய்யறிவினையுடைய மேலோரும் இரந்து செல்வரோ? செல்லார்!

கருத்து:

பிறரை எளியராகவுந் தம்மைப் பெரியராகவுங் கருதும் உள்ளமுடையோரிடம் இரத்தற்கு அஞ்சுதல் வேண்டும்.

விளக்கம்:

ஆதல் - வாழ்வுபெறுதல்; ஆக்கம் என்றதும் அது. தம்மால் என்றார், தமது முயற்சி வல்லமையால் என்றற்கு!.

தக்கோர்க்கு உதவி செய்தே தாம் பெரியராதல் வேண்டுமென்று அறியாமையின்1 ‘மருண்ட' என்றும், வாழ்க்கையின் பயனாகிய தெளிவு பொருளினாலேயே வருவதன்று என்றறிந்தொழுகுதலின் ‘தெருண்ட' என்றுங் கூறினார்.

‘மருண்ட மன' மென்றும் ‘தெருண்ட அறி'வென்றுங் கூறிய வேறுபாடும் அறிதற்குரியது;.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Oct-22, 1:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே