முதுமக்கள் அன்றி முனிதக்கார் ஆய பொதுமக்கள் பொல்லா ஒழுக்கம் - பழமொழி நானூறு 209

நேரிசை வெண்பா

முதுமக்கள் அன்றி முனிதக்கார் ஆய
பொதுமக்கள் பொல்லா ஒழுக்கம் - அதுமன்னும்
குன்றத்து வீழும் கொடியருவி நன்னாட!
மன்றத்து மையல்சேர்ந் தற்று. 209

- பழமொழி நானூறு

பொருளுரை:

நிலைபெற்ற மலையினின்றும் இழியும் கொடிபோன்ற அருவியை உடைய நல்ல மலைநாடனே!

அறிவால் நிரம்பிய மக்களாய் இல்லையாதலோடு வெறுக்கத்தக்கவர்களாகிய சிறப்பில்லாத மக்கள் தீய ஒழுக்கத்தைப் பூண்டிருத்தல் ஆகிய அது நான்கு வீதிகள் சேரும் சதுக்கத்திலே பித்து ஏறியவன் இருந்ததை ஒக்கும்.

கருத்து:

கீழ்மக்களது தீய ஒழுக்கம் மிகவும் அஞ்சத்தக்கது.

விளக்கம்:

தீய ஒழுக்கத்தை உடையவராயினும், அறிவிற் சிறந்தவராய் இருப்பின் தமது ஒழுக்கத்தை மறைத்தல் கூடும்.

அது இன்மை தமது தீய ஒழுக்கத்தைப் பிறருக்கு நன்றாக விளக்கிக் காட்டுமாதலால், சதுக்கத்தின்கண் இருந்த மதிமயங்கியோனுக்கு ஒப்பாயினர்.

பித்தேறியவனுக்குப் பலரையும் துன்புறுத்தச் சதுக்கம் நல்ல இடம் ஆயினாற்போல, பிறரை வருத்தும் பொருட்டு வேகும் தீயஒழுக்கம் உடையவர் என்பதாம்.

'மன்றத்து மையல் சேர்ந்தற்று' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Nov-22, 7:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கட்டுரைகள்

மேலே