480 ஈயாதானை ஏசியடித்து உதைத்துமிழ்வள் பொதுமகள் – கணிகையரியல்பு 7
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
முனங்காலை வருடுமவள் கரங்கோல்போல் முதுகின்மேன்
..மோதப் பூமேல்
அனங்கான மயிலென்ன நடஞ்செய்த கழனம்மேல்
..ஆடித் தாக்கத்
தினங்கான ரசமுதவு வாயேசி உமிழவிந்தச்
..செய்கை கண்டும்
இனங்காத லாயவளில் ஏகுதியோ நிற்குதியோ
..இயம்பாய் நெஞ்சே. 7
– கணிகையரியல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
மனமே! நிறையப் பொருள் கொடுத்து வந்த முன் நாட்களில் நம் காலை மெத்தெனப் பிடித்து இன்புறுத்தும் அவள், வறுமையுற்ற இந்நாளில் அவள் கையே முருட்டுக்கோல்போல் நம் முதுகில் அடித்தது.
நிலத்தின்மேல் அன்னம்போலவும், மயில் போலவும் நடந்து ஆடியுள்ள அவள் கால்கள் நம்மேல் ஆடித் துன்புறுத்தின.
நாள்தோறும் இசையமுதூட்டும் அவள் வாய் திட்டியும் எச்சில் கொட்டியும் இழிவு செய்தது. இவைகளைக் கண்டும் இன்னமும் பேரன்பு கொண்டு அவள் வீட்டிற்குச் செல்லப் போகிறாயா? அல்லது போகாமல் நிற்கப்போகிறாயா? கூறுவாயாக.
வருடுதல் - தடவுதல்; பிடித்தல். அனம் - அன்னம். கழல் - கால். தாக்கல் - துன்புறுத்தல்.
கானம் - இசை. ரசம் - சுவை. இயம்பல் - சொல்லல்.