481 ஆடவரை ஆண்கோலம் என்றறைவள் கிழவி – கணிகையரியல்பு 8
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
ஆவலாலே அவகாலத் தவளில்நான் புகச்சிலபேர்
..அங்கி ருந்து
மேவியோடி னர்சினமுற் றிவராரென் றேன்மாமி
..விரைவாய் வந்து
பூவையிவள் நின்பிரிவாற் றாதழப்பாங் கியர்க்குனைப்போற்
..புருட வேடந்
தாவறவே தரித்தவட்குக் காட்டினன்வே றன்றென்று
..சாதித் தாளே. 8
– கணிகையரியல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
மிகுந்த வேட்கையுடன் காலங்கடந்து அவளுடைய வீட்டுக்குச் சென்றேன். சென்றதும் அங்கிருந்து சிலபேர் ஓடினர். சினங்கொண்டு இவர் யாரென்றேன்.
உடன் தாய்க் கிழவியாகிய மாமி வந்தாள். `உன்னுடைய பிரிவுத்துன்பம் பொறுக்காது என் மகள் அழுதாள்; அவள் அழுகையை நீக்கத் தோழியர்க்கு உன்னைப் போல் ஆண்கோலம் பொருத்தமுற அமைத்துக் காட்டினேன். வேறொன்றுமின்று என உறுதியாகச் சொன்னாள்.
ஆவல் - வேட்கை. அவகாலம் - எதிர்பாராத வேளை. பாங்கியர் - தோழியர்.
புருடவேடம் - ஆண்கோலம். தாவற - குற்றமற; பொருத்தமுற. தரித்தல் - அமைத்தல். சாதித்தாள் - உறுதியாகச் சொன்னாள்.