பொய்யும் புரட்டும் வெல்லும்
பொய்யும் புரட்டும் வெல்லும் - அது 
புரிதலின்றி செல்லும் 
வீணாய் வாயை மெல்லும் - அது 
தானாய்த் தன்னை கொல்லும்
அடுத்தவர் உழைப்பை உண்ணும் - அது 
கெடுத்தவர் கையை பின்னும் 
படுத்தவர் மீது நடக்கும் - அது 
படித்தவர் என்றே மிடுக்கும்
 
தலையை ஆட்டி நடிக்கும் - அது 
வலையை நீட்டி பிடிக்கும் 
களையை ஊற்றி வளர்க்கும் - அது 
குளையில் ஏறி மிதிக்கும்
பாலாய்ப் பல்லைக் காட்டும் - அது 
வேலாய் சொல்லைத் தீட்டும் 
முதுகுக்குப் பின்னால் பேசும் - அது 
கதவுக்குப் பின்னால் ஏசும்
நிறத்தை அறிந்து வாழ்வோம் - தமிழ்
அறத்தை அறிந்து வாழ்வோம் 
சிரத்தை அறிந்து உய்வோம் - துணிந்து
சிறுமையின் தலையைக் கொய்வோம்.
--- நிலாசூரியன் தச்சூர்
 
                    
