கயவர்க்கு எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீ தாயின் எழுநூறுந் தீதாய் விடும் - நாலடியார் 357
நேரிசை வெண்பா
(இடையின எதுகை)
ஒருநன்றி செய்தவர்க்(கு) ஒன்றி யெழுந்த
பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்: - கயவர்க்
கெழுநூறு நன்றிசெய்(து) ஒன்றுதீ தாயின்
எழுநூறுந் தீதாய் விடும் 357
- கயமை, நாலடியார்
பொருளுரை:
தமக்கு ஒரு நன்மை செய்தவர்க்குச் சான்றோர் அவரால் பின்பு தொடர்ந்து உண்டான நூறு குற்றங்களும் பொறுத்து நிற்பர்;
ஆனால், அறிவில் தாழ்ந்தோர்க்கு ஒருவர் எழுநூறு நன்மைகள் செய்து பின்பு தவறுதலால் ஒன்று தீமையாக நேர்ந்து விட்டால் அவ்வெழுநூறு நன்மைகளும் தீமைகளாய்க் கருதப்பட்டு விடும்.
கருத்து:
கயவர் அறிவு, நன்மைகளில் அழுந்தி நில்லாமல் தீமைகளையே முனைந்தெண்ணி நிற்கும்.
விளக்கம்:
ஒன்றியெழுதல் - சேரத்தோன்றுதல், பொறுத்தலாவது - பொறுத்துத் தீங்கியற்றாது நிற்றலென்றும்,
‘தீதாய் விடுதலாவது - தீமைகளாய்க் கருதப்பட்டுப் பல துன்பங்கள் விளைதற்கு ஏதுவாய் விடுதல் என்றுங் கொள்க;